‘ஸ்டோன் பெஞ்ச் புரொடெக்ஷன்’ – ஜீ ஸ்டுடியோஸ் நிறுவனங்கள் இணைந்த தயாரிப்பில், தமிழ், தெலுங்கு மொழிகளில் வெளியாகியிருக்கும் படம், ரத்னம். இது, தாமிரபரணி, பூஜை ஆகிய படங்களுக்குப் பிறகு, இயக்குநர் ஹரி – விஷால் இணைந்திருக்கும் மூன்றாவது படம்.
‘ரத்னம்’படத்தினில்,, விஷாலுடன் பிரியா பவானி ஷங்கர், சமுத்திரக்கனி, துளசி, ஜெயப்பிரகாஷ், விஜயகுமார், கெளதம் வாசுதேவ் மேனன், முரளி ஷர்மா, முத்துகுமார், ஹரீஷ் பெராடி, கஜராஜ், ஒய் ஜி மகேந்திரன், யோகிபாபு, மொட்டை ராஜேந்திரன், விடிவி கணேஷ், கும்கி அஸ்வின், டெல்லி கணேஷ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
தமிழ்நாடு – ஆந்திர எல்லைப் பகுதி. தமிழ்நாட்டுப் பகுதிக்குள் வசிக்கும் சமுத்திரக்கனியை ஒரு பெண் தலைமையிலான கும்பல் கொலை செய்ய முயற்சிக்கிறது. அப்போது, சிறுவனாக இருக்கும் விஷால், அந்தப் பெண்ணை கொன்று விஷாலின் உயிரை காப்பாற்றுகிறார். கொலை செய்த குற்றத்திற்காக, சீர்திருத்தப் பள்ளிக்கு சென்று திரும்பும் விஷாலை, சமுத்திரக்கனி அரவணைத்து கொள்கிறார். அதன் பிறகு விஷால், வேலூர் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினரான சமுத்திரக்கனியின் தொழில்கள் மற்றும் கட்டப்பஞ்சாயத்து வேலைகளை செய்து வருகிறார்.
ஒரு நாள், பிரியா பவானி சங்கரை முதல் முறையாக பார்க்கும் விஷாலுக்கு, அவர் மீது ஒரு ஈர்ப்பு ஏற்படுகிறது. மேலும் அவரைப்பற்றி தெரிந்து கொள்ள அவரை பின் தொடர்கிறார். அப்போது ஒரு கும்பல், பிரியா பவானி சங்கரை கொலை செய்ய முயற்சிக்கிறது. இதற்கிடையே, அதற்கான காரணம் விஷாலுக்கு தெரிய வருகிறது. அவர்களை தனது எதிரிகளாக பாவித்து களமிறங்குகிறார். இதன் பிறகு என்ன நடந்தது? என்பதை, இயக்குநர் ஹரி, தனது வழக்கமான திரைக்கதை மூலம் விவரித்திருப்பதே ரத்னம் படத்தின் கதை.
நெற்றி புடைக்க வசனங்கள் பேசும் விஷால், ரத்னமாக மொத்தப் படத்தையும் சுமந்திருக்கிறார். வெட்டு, குத்து, பறக்கும் கார்கள் என, அதிரடி ஆக்ஷன் காட்சிகளில், அடித்து தூள் பரத்துகிறார். ஆக்ஷன் காட்சிகளில் ஏகப்பட்ட ரிஸ்க் எடுத்திருப்பது காட்சிகளில் நன்றாகவே தெரிகிறது. அம்மா சென்டிமென்ட் காட்சிகளிலும் உருக வைக்கிறார்.
திரைக்கதையோடு பயணிக்கும் கதாபாத்திரம் பிரியா பவானி சங்கருக்கு. கிடைத்த காட்சிகளில் நடித்து ரசிகர்களின் மனதில் நிறைந்து விடுகிறார்.
அரசியல்வாதியாக சமுத்திரக்கனி. வழக்கம் போல் தனது நடிப்பின் மூலம், கதாபாத்திரத்திற்கு ஏற்றபடி நடித்துள்ளார்.
யோகி பாபு வரும் சில காட்சிகள் சிரிக்க வைக்கிறது. நான் கடவுள் ராஜேந்திரன், விடிவி கணேஷ் போன்றவர்களின் நகைச்சுவை பரவாயில்லை.
முரளி சர்மா, ஹரிஷ் பெராடி, முத்துக்குமார் ஆகியோரின் வில்லத்தனம் வழக்கம் போல் மிரட்டுகிறது. இதில், முரளி சர்மா தனது நடிப்பின் மூலம் பயமுறுத்துகிறார்.
விஜயகுமார், ஜெயப்பிரகாஷ், துளசி, கஜராஜ், கெளதம் மேனன், ஒய்.ஜி.மகேந்திரன், கணேஷ் வெங்கட்ராமன், கும்கி அஸ்வின் ஆகியோர் காட்சிகளுக்கேற்றபடி நடித்துள்ளனர்.
ஒளிப்பதிவாளர் எம்.சுகுமார் ஆக்ஷன் காட்சிகளை அட்டகாசமாக படம்பிடித்துள்ளார்ரானால், சண்டைக்காட்சிகளில், எடிட்டர் கவனம் செலுத்தவில்லையோ? எனத் தோன்றுகிறது.
தேவி ஸ்ரீ பிரசாத்தின் இசையில் பாடல்களும், பின்னணி இசையும் பரவாயில்லை!
இயக்குநர் ஹரி, தனது வழக்கமான கமர்ஷியல் பாணியில், சென்டிமென்ட் கலந்து, விஷால் – பிரியா பவானி சங்கர் இடையே, யாரும் எதிர்பார்க்காத ஒரு திருப்பத்தை வைத்து, சுவாரசியமாக திரைக்கதையை நகர்த்தியிருக்கிறார். திருப்பங்கள் நிறைந்த திரைக்கதையில், சலிக்கும் அளவுக்கு இருக்கும் ஆக்ஷன் காட்சிகளை குறைத்திருக்கலாம். அதோடு காட்சிகளின் நீளத்தினை குறைத்திருந்தால், ரசிகர்கள் அனைவரும் கொண்டாடி இருப்பார்கள்.
மொத்தத்தில், ‘ரத்னம்’ ஆந்திரா மசாலாப்படங்களை மிஞ்சி நிற்கிறது!