இந்தியாவின் முன்னணி பொழுதுபோக்கு ஸ்ட்ரீமிங் தளமான பிரைம் வீடியோ, உலகளாவிய ரசிகர்களின் பெரும் வரவேற்பையும் விமர்சகர்களின் பாராட்டுகளையும் பெற்ற தங்களின் தமிழ் ஒரிஜினல் சஸ்பென்ஸ் திரில்லர் சீரிஸான ‘வதந்தி’ தொடரின் இரண்டாவது சீசனை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. ‘வதந்தி சீசன் 2 – தி மிஸ்டரி ஆஃப் மணி’ என்று பெயரிடப்பட்டுள்ள இந்த அதிரடித் தொடர் வரும் ஆகஸ்ட் 7 முதல் உலகம் முழுவதும் உள்ள பிரைம் வீடியோ தளத்தில் பிரம்மாண்டமாக வெளியாகவுள்ளது. குற்றவுணர்வு, பல திடுக்கிடும் ரகசியங்கள், ஆபத்தான வதந்திகள் மற்றும் அதிலிருந்து மீண்டுவரும் மனித உணர்வுகள் ஆகியவற்றை மையமாகக் கொண்ட ஒரு பரபரப்பான மர்மக் கதையாக இந்த இரண்டாவது சீசன் மிக அழுத்தமாக உருவாக்கப்பட்டுள்ளது.
மதுரையை முதன்மையான கதைக்களமாகக் கொண்டு உருவாகியுள்ள இந்த சஸ்பென்ஸ் திரில்லர் சீரிஸில், தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் எம். சசிகுமார் முதன்மைக் கதாபாத்திரத்தில் நடித்து அசத்தியுள்ளார். இதில் அவர் எஸ்.ஐ. மூசா ரஸா என்ற நேர்மையான, எந்த ஒரு சவாலையும் எதிர்கொண்டு உண்மையைத் தேடி விடாமுயற்சியுடன் செயல்படும் ஒரு துடிப்பான காவல் அதிகாரியாக வலம் வருகிறார். மதுரையின் தனித்துவமான கலாச்சாரப் பின்னணியையும், உலகப் புகழ்பெற்ற ஜல்லிக்கட்டு திருவிழாவின் துடிப்பையும் கதையுடன் இயல்பாக இணைக்கும் இந்த புதிய சீசன், வதந்தி தொடரின் அடையாளமான ‘வதந்தி Vs உண்மை’ என்ற மையக்கருவை மேலும் ஆழமாக ஆராய்கிறது. பல அடுக்குகள் கொண்ட விறுவிறுப்பான திரைக்கதை, சிக்கலான கதாபாத்திரங்கள் மற்றும் உணர்வுபூர்வமான உறவுகள் ஆகியவற்றின் மூலம் பார்வையாளர்களை இறுதி வரை இருக்கையின் நுனிக்கே கொண்டு வந்து பரபரப்பில் வைத்திருக்கும் வகையில் இதன் கதை நகர்கிறது.
கதையின் முக்கிய திருப்பமாக, நெடுஞ்சாலை திட்டத்தின் தொடக்க விழாவின்போது ஒரு மர்மமான எலும்புக்கூட்டின் எச்சங்கள் கண்டெடுக்கப்படுகின்றன. அந்த அதிர்ச்சியூட்டும் விசாரணையைத் தன் கையில் எடுக்கும் எஸ்.ஐ. மூசா ரஸா, ‘மணி’ என்ற மர்மமான கைதியை நோக்கிச் செல்லும் பல எதிர்பாராத தடயங்களைக் கண்டுபிடிக்கிறார். இந்த வழக்கைச் சுற்றி எழும் கடுமையான அரசியல் அழுத்தங்கள், ஊடகங்களின் பரபரப்பு மற்றும் மனித மனங்களின் பலவீனங்கள் ஆகியவற்றுக்கு மத்தியில், அனைத்து சவால்களையும் முறியடித்து உண்மையை உலகிற்கு வெளிக்கொணர அவர் மேற்கொள்ளும் அசாத்திய போராட்டமே இந்த சீசனின் முதன்மையான மையக்கதையாக வடிவமைக்கப்பட்டுள்ளது.
இப்படம் குறித்து இதன் கிரியேட்டிவ் தயாரிப்பாளர்களான புஷ்கர் – காயத்ரி கூறுகையில்,
சஸ்பென்ஸ், உண்மை மற்றும் மனிதர்களின் பார்வை ஆகியவற்றின் தனித்துவமான கலவையைத் தக்கவைத்துக் கொண்டே, உணர்வுபூர்வமாகவும் ஈர்க்கக்கூடியதாகவும் இருக்கும் ஒரு கதையை இந்த இரண்டாவது சீசன் சொல்கிறது என்று குறிப்பிட்டனர். இயக்குனர் ஆண்ட்ரூ லூயிஸ் மீண்டும் இந்தக் கதையைச் சிறப்பாக உயிர்ப்பித்து, தொடரின் அடையாளத்தைப் பாதுகாத்தபடியே அதனை ஒரு புதிய திசையில் கொண்டு சென்றுள்ளார் என்று பாராட்டினர். மேலும், சசிகுமார் மற்றும் முழு நடிகர் குழுவும் கதைக்கு மிகுந்த ஆழத்தை அளிக்கும் வகையில் அசாதாரணமான நடிப்பை வழங்கியுள்ளனர் என்றும், தங்களைப் போன்ற கலாச்சார வேர்களைக் கொண்ட கதைகளுக்குத் தொடர்ந்து ஆதரவு அளித்து வரும் பிரைம் வீடியோவுக்குத் தங்களின் நன்றியையும் தெரிவித்துக் கொண்டனர். இந்தியாவிலும் உலகம் முழுவதும் உள்ள ரசிகர்களுடன் ‘வதந்தி சீசன் 2 – தி மிஸ்டரி ஆஃப் மணி’ தொடரைக் காணத் தாங்களும் ஆவலுடன் காத்திருப்பதாகப் புஷ்கர் – காயத்ரி நெகிழ்ச்சியுடன் பகிர்ந்து கொண்டனர்.
இயக்குனர் ஆண்ட்ரூ லூயிஸ் இந்த விறுவிறுப்பான மர்மத் தொடரை உருவாக்கி, எழுதி, இயக்கியுள்ளார். மொத்தம் 8 எபிசோடுகளைக் கொண்ட இந்த பிரம்மாண்ட சீரிஸை, வால்வாட்சர் ஃபிலிம்ஸ் சார்பில் தமிழ் சினிமாவின் புகழ்பெற்ற இயக்குனர்களான புஷ்கர் – காயத்ரி கிரியேட்டிவ் தயாரிப்பாளர்களாக இருந்து தயாரித்துள்ளனர். இந்தத் தொடரில் முதன்மை நாயகன் சசிகுமாருடன் இணைந்து யஷ்வந்த், அனகா மருதோரா, அபர்ணா தாஸ், விவேக் பிரசன்னா, ரேவதி சர்மா மற்றும் அர்ஜுன் நந்தகுமார் உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். மதுரையின் பின்னணியில் நடக்கும் இந்த விசித்திரமான கொலையும், அதைச் சுற்றிப் பரவும் வதந்திகளும், அதன் பின்னணியில் இருக்கும் உண்மைகளையும் துப்பறியும் இந்த நட்சத்திரப் பட்டாளங்களின் எதார்த்தமான நடிப்பு ஒட்டுமொத்த சீரிஸுக்கும் ஒரு கூடுதல் பலமாக அமைந்துள்ளது. முதல் பாகத்தின் மாபெரும் வெற்றியைத் தொடர்ந்து, மேலும் பல புதிய மர்மங்களுடன் ஆகஸ்ட் 7 அன்று வெளியாகவிருக்கும் ‘வதந்தி சீசன் 2’ தங்களுக்கு ஒரு சிறந்த ஓடிடி விருந்தாக இருக்கும் என திரில்லர் ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.