சென்னையில் நடந்த ஓர் உண்மைச் சம்பவத்தின் பின்னணியில் உருவாகி இருக்கும் படம் ‘ராபர்’. இப்படத்தை ‘இம்ப்ரஸ் ஃபிலிம்ஸ்’ சார்பில் பத்திரிகையாளர் S.கவிதா, ‘மெட்ரோ ப்ரொடக்ஷன்ஸ்’ சார்பில் ஆனந்த கிருஷ்ணனும் இணைந்து தயாரித்துள்ளனர். இப்படத்தின் நாயகனாக ‘மெட்ரோ’ படத்தில் நடித்து அனைவராலும் கவனிக்கப்பட்ட சத்யா நடித்துள்ளார். இவருடன், தீபா சங்கர், ஜெயப்பிரகாஷ், சென்ராயன், டேனி போப் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர்.
‘மெட்ரோ ‘திரைப்படத்தின் இயக்குநரான ஆனந்த கிருஷ்ணன் கதை, திரைக்கதை எழுதியுள்ளார். அறிமுக இயக்குநரான எஸ்.எம்.பாண்டி, இந்தப் படத்தை இயக்கியுள்ளார்.
இந்த ‘ராபர்’ படம் பற்றி இயக்குநர் எஸ்.எம்.பாண்டி பேசும்போது,
‘ஒரு கிராமத்திலிருந்து சென்னைக்கு வேலை தேடி வருகிறான் நாயகன். சென்னையின் பகட்டும், பளபளப்பும் அவனைக் கவர்கிறது. சென்னை மாநகர மக்களின் ஆடம்பர வாழ்க்கையின் மேல் ஈர்ப்பு ஏற்பட்டு, தானும் இது போல் வாழ வேண்டும் என்று ஆசைப்படுகிறான்.
ஆசை வெட்கம் அறியாது; அதை அடையும் வழியின் ஆபத்தையும் உணராது. “ஆசையே துன்பங்களுக்குக் காரணம்” என்றார் புத்தர். “நிலத்தில் விளையும் களைகள் பயிர்களைப் பாதிக்கின்றன; மனதில் விளையும் ஆசைகள் மனிதனின் குண நலன்களைப் பாதிக்கின்றன…” என்கிறது தம்மபதம்.
நாயகனின் ஆசை பேராசையாகி, வெறியாக மாறுகிறது. அவனது குறுக்கு வழி, திருட்டு வழியாக மாறுகிறது. ஆம். அவன் திருட்டுத் தொழிலில் இறங்குகிறான். நாயகன் தேர்ந்தெடுத்த பாதை, அவன் வாழ்க்கையை எப்படிப் பாதிக்கிறது என்பதுதான் இந்த ‘ராபர்’படத்தின் கதை..” என்றார்.
‘ராபர்’ படத்தின் தயாரிப்பாளர் கவிதா பேசும்போது,
“ஒரு உண்மைச் சம்பவத்தை மையமாக வைத்து இந்தப் படம் உருவாகி இருப்பதால் காட்சிகளும் உண்மைக்கு மிக அருகில் இயல்பாக இருக்கும்.
நகர்ப் பகுதிகளில் குறிப்பாக மாநகரங்களில் நடைபெறும் குற்றச் செயல்களின் பின்னணியில் கஞ்சா, மது மற்றும் போதைப் பொருள்களின் புழக்கம் இருப்பதாகக் குற்றவியல் சார்ந்த புள்ளி விவரங்கள் கூறுகின்றன. இது போன்ற போதைப் பழக்கங்கள் இளைஞர்களை முன்னேற விடாமல், சிந்திக்க விடாமல் குற்றச் செயல்கள் செய்யத் தூண்டுகிறது என்பது ஒரு கசப்பான உண்மை. அதைப் பார்ப்பவரை உணரவைக்கும்படி இந்தப் படம் அமைந்திருக்கும்.
இந்த ‘ராபர்’ படத்தின் படப்பிடிப்பு சென்னைக்குள் இருக்கும் தியாகராய நகர், வேளச்சேரி போன்ற இடங்களிலும், சென்னையைச் சுற்றியுள்ள செம்மஞ்சேரி, கிழக்கு கடற்கரை சாலை, பழைய மகாபலிபுரம் சாலை போன்ற பகுதிகளிலும் நடைபெற்றுள்ளது..” என்றார்.
‘ராபர்’ திரைப்படம், கோடை விருந்தாக வரும் மே மாதத்தின் இறுதியில் வெளியாகும் வகையில் தற்போது படப்பிடிப்புக்குப் பிந்தைய மெருகேற்றும் பணிகள் நடைபெற்று வருகின்றன.
‘ராபர்’ படத்தின் ‘டைட்டில் ஃபர்ஸ்ட் லுக்கினை, நடிகர் சிவகார்த்திகேயன் வெளியிட்டு, படக்குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்தார்.
‘ராபர்’ படத்திற்கு என்.எஸ்.உதயகுமார் ஒளிப்பதிவு செய்துள்ளார். ஜோகன் சிவனேஷ் இசை அமைத்துள்ளார். படத் தொகுப்பு – ஸ்ரீகாந்த் NB, கலை இயக்கம் – PPS விஜய் சரவணன், நடன இயக்கம் – ஹரி கிருஷ்ணன்.
அருண் பாரதி, லோகன், ஜோகன் சிவனேஷ், மெட்ராஸ் மீரான், சாரதி எழுதிய பாடல்களை அந்தோணி தாசன், வித்யா கல்யாணராமன், ஜோகன் சிவனேஷ் ஆகியோர் பாடியுள்ளனர்.