‘சூது கவ்வும் 2’ –  விமர்சனம்!

Cast:  Mirchi Shiva, Harisha, Radha Ravi, Karunakaran, M.S. Bhaskar, Karate Karthi, Raghu, Yog Japee, Aruldoss, Kalki, Kavi.

Writer & Director: S J Arjun

Production Banner:  Thirukumaran Entertainment & Thangam Cinemas

Producer: C V Kumar & S Thangaraj

Music (Songs): Edwin Louis Viswanath

Music (Background Score ): Hari S R

DOP: Karthik K Thillai.

விஜய் சேதுபதி நடித்து, நலன் குமாரசாமி இயக்கத்தில்  2013-ஆம் ஆண்டு வெளியான கல்ட் க்ளாஸிக் திரைப்படம், ‘சூது கவ்வும்’. வணிக ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் பெரும் வெற்றி பெற்றது. தற்போது, இப்படத்தின் தொடர்ச்சியாக ‘சூது கவ்வும் 2’, மிர்ச்சி சிவா நடிப்பில், எஸ்.ஜே.அர்ஜுன் இயக்கத்தில் வெளியாகியுள்ளது.

சூது கவ்வும் 2 திரைப்படத்தில், சிவா, ஹரிஷா ஜஸ்டின் ,கருணாகரன் ,வாகை சந்திர சேகர் ,MS பாஸ்கர் ,கவி ,கல்கி ,அருள் தாஸ் ,யோக் ஜேபி ,கராத்தே கார்த்தி ,ராதா ரவி உல்லிட்ட பலர் நடித்துள்ளனர்.

சூது கவ்வும் முதல் பாகத்தில் அரசியலுக்குள் நுழைந்த கருணாகரன், தற்போது நிதியமைச்சராக பொறுப்பு ஏற்று, மிகப்பெரும் ஊழல்கள் செய்து, கட்சிக்கு பல்லாயிரம் கோடிகளை குவிக்கிறார்.  எலக்‌ஷன் வரும் நேரத்தில், சிவா கருணாகரனை கடத்தி விடுகிறார். கட்சிக்கு துரோகம் செய்ததற்காக கருணாகரனை, MS பாஸ்கர் மறுபுறம் தேடி வருகிறார். இதன் பின்னர் என்ன நடக்கிறது? என்பது தான் சூது கவ்வும்2  திரைப்படத்தின் கதை.

தேர்தல் சமயங்களில் கொடுக்கப்படும் வாக்குறுதிகள், இலவசங்கள் மூலம், தற்போதைய அரசியல் நிலவரங்களை நிர்வாண படுத்தியிருக்கிறார்கள். அதிலும் இலவச மதுபாணம், இலவச ஐ போன் திட்டங்கள், வெட்கக்கேடான,அரசியல்வாதிகள், எந்த எல்லைக்கும் செல்வார்கள் என்பதை சொல்லும் விதம் நிஜம்!

அரசியல்வாதியாக கருணாகரன் செய்யும் சேட்டைகள் ரசிக்கவைக்கின்றன. க்ளைமாக்ஸில், கட்சித் தலைவருக்கே இலவச மருத்துவ சிகிச்சை அளிப்பது சிரிக்கவும், ஓட்டுப்போடும் மக்களை சிந்திக்கவும் வைக்கிறது. முதல் பாகத்தில் உள்ள காட்சிகளை திரைக்கதையில் கச்சிதமாக பொருத்தியிருக்கிறார்கள்.

சிவா தனது வழக்கமான டைமிங் காமெடியில், ஒரு சில இடங்களில் சிரிக்க வைக்கிறார். காமெடிக் காட்சிகளில் இன்னும் கூடுதல் கவனம் செலுத்தியிருக்கலாம்.

MS பாஸ்கர் அப்பாவி அரசியல்வாதியாக நடித்து சிரிக்கவைக்கிறார். அதிலும் கதவை கடப்பாரையால் உடைக்கும் காட்சியில், தந்திராமாக தன்னை சிக்க வைத்ததை நினைத்து, அய்யோ பாவமாக நடித்திருக்கிறார்.

கவி ,கல்கி ,அருள் தாஸ் ,யோக் ஜேபி ,கராத்தே கார்த்தி கோஷ்டியினர் அவ்வப்போது சிரிக்க வைக்கின்றனர்.

முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கும் சிவா, கருணாகரன் ஆகிய இருவரில், திரைக்கதையில் கருணாகரனுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருப்பது போல் இருக்கிறது. அதை கருணாகரன் தனது நடிப்பால் சிறப்பாக பயன்படுத்தியிருக்கிறார்.

க்ளைமாக்ஸில்,  கருணாகரன் முதலமைச்சர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டவுடன், அவர் தலையாட்டும் ஸ்டைல் வேற லெவல்!

அரசியல் கட்சித்தலைவர்களாக வாகை சந்திரசேகர், ராதாரவி இருவரும் அனுபவமிக்க நடிப்பினால் கவர்கிறார்கள்.