‘வால்டர்’ – விமர்சனம்

புதுமுக இயக்குனர் அன்பு இயக்கத்தில் சிபிராஜ், ஷ்ரின் கான்ஞ்வாலா , ‘நட்டி’ நட்ராஜ், சமுத்திரக்கனி, ரித்விகா, யாமினி சந்தர் ஆகியோர் நடித்துள்ள படம், ‘வால்டர்’. 11:11 Productions சார்பில் ஸ்ருதி திலக் தயாரித்துள்ளார்.

தமிழகத்தின் முதல் பெண் ஐபிஎஸ் அதிகாரி திலகவதி. இவர் காவல்துறை அதிகாரியாக மட்டுமில்லாமல் எழுத்தாளராகவும் புகழ்பெற்றவர். தன்னுடைய ‘கல்மரம்’ நாவலுக்கு சாகித்ய அகடெமி விருதை பெற்ற சிறப்புக்குரியவர். இவரது குடும்பத்திலுள்ளவர் ‘வால்டர்’ படத்தை தயரித்ததாலும், சத்யராஜ் நடிப்பில் பி.வாசு இயக்கத்தில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற ‘வால்டர் வெற்றிவேல்’ படத்தினாலும் இந்தப்படத்திற்கு எதிர்பார்ப்பு உருவாகியிருந்தது. அதை பூர்த்தி செய்திருக்கிறதா இந்த வால்டர்?

கும்பகோணம் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள அரசு மருத்துவமனையிலிருந்து அவ்வபோது பச்சிளங் குழந்தைகள் காணாமல் போவதும், பின்னர் பொது இடங்களில் கிடைப்பதுமாக நிகழ்ந்து வருகிறது. இப்படி திரும்ப கிடைக்கும் குழந்தைகள் மர்மமான முறையில் இறக்கின்றன. இந்த மர்மத்தை கண்டுபிடிக்கும் பொறுப்பு போலீஸ் அதிகாரி சிபிராஜிடம் ஒப்படைக்கப்படுகிறது. அவர் கண்டுபிடித்தாரா? இல்லையா? என்பது தான் ‘வால்டர்’ படத்தின் சோர்வான, சொதப்பலான திரைக்கதை மற்றும் க்ளைமாக்ஸ்!

ஒரு படத்தில் ஹீரோ கெத்தில்லாமல் வில்லன் கெத்தாகயிருந்தாலும் அல்லது வில்லன் கெத்தாகயிருந்து ஹீரோ கெத்தில்லாமலிருந்தாலும் சகித்து கொள்ளலாம். ஆனால் ரெண்டு பேருமே கெத்தில்லாமல் இருந்தால் முடியுமா? இந்தப்படத்திலே ரெண்டு பேருமே சொத்தை! சரி பரவாயில்லை! சொல்ற கதையையாவது புதுசா சொல்லியிருக்காங்களான்னா அதுவுமில்லை! சீன் கம்போஸூம் சரியாகயில்லை! விஸுவல் டேஸ்டும் இல்லை! இப்படி படத்தில் ஏகப்பட்டவை இல்லை!

சில காட்சிகளில் நட்டி நட்ராஜ் சற்றே ஆறுதல் தருகிறார்.

ஒரு போலீஸ் அதிகாரி காரில் வரும் ஒருவரை என்கவுன்டர் செய்யும்போது, அந்தக்காரின் உள்ளே வேறு யாரும் இருக்கிறார்களா? என பார்க்ககூட தெரியாத ‘முட்டாள்’ அதிகாரி தான் இந்த ‘வால்டர்’. அவ்ளோ தான்!!!