VJ Combines நிறுவனம் Dass Pictures உடன் இணைந்து வழங்க, தயாரிப்பாளர் ஜகநாதன் பரமசிவம் தயாரிப்பில், இயக்குநர் U அன்பு இயக்கத்தில், கேப்டன் விஜயகாந்த் அவர்களின் மகன் நடிகர் சண்முக பாண்டியன் நடிப்பில், காட்டு யானைகளின் வாழ்வியல் பின்னணியில், அங்கு வாழும் மக்களின் வாழ்க்கைக் கதையைச் சொல்லும் படமாக உருவாகியுள்ள திரைப்படம் படம் “படைத் தலைவன்”.
வரும் மே 23 ஆம் தேதி உலகமெங்கும் திரைக்கு வரவுள்ள நிலையில், இப்படத்தின் இசை வெளியீட்டு விழா, தே.மு.தி.க பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த், L.K. சுதீஷ், ஹீரோ சண்முக பாண்டியன், விஜய பிரபாகரன், இயக்குநர் -நடிகர்கள் கஸ்தூரி ராஜா, சசிக்குமார், இயக்குநர்கள் A.R. முருகதாஸ், பொன்ராம் படத்தின் தயாரிப்பாளர் ஜகநாதன் பரமசிவம், இயக்குநர் .U.K. அன்பு, ஒளிப்பதிவாளர் சுரேஷ், தயாரிப்பாளர்கள் T. சிவா, J.S.K. சதீஷ், நடிகை யாமினி மற்றும் படக்குழுவினர் ஆகியோர் கலந்துகொள்ள, பத்திரிக்கை ஊடக நண்பர்கள் முன்னிலையில் கோலாகலமாக நடைபெற்றது.
இந்நிகழ்வினில், படத்தின் இயக்குநர் U அன்பு பேசியதாவது,
என் தயாரிப்பாளர்களுக்கும், சண்முக பாண்டியனுக்கும் மிக்க நன்றி. என்னை நம்பி இந்த படைப்பை என்னிடம் கொடுத்துள்ளனர். அவர்களிடம் நான் கொடுத்த வாக்கைக் காப்பாற்றி விட்டேன் என்று நம்புகிறேன், எனக்கு உதவியாக இருந்த படக்குழு, அனைவருக்கும் என் நெஞ்சார்ந்த நன்றிகள், படத்தின் வெற்றி நிகழ்வில் மீண்டும் நம் சந்திப்போம் நன்றி.
படைத்தலைவன் படத்தின் கதாநாயகன் சண்முக பாண்டியன் பேசியதாவது..
‘இந்த படம் என் மனதிற்கு மிகவும் நெருக்கமான படம், காரணம் அப்பா இருக்கும்போது இந்த படத்தின் கதையைக் கேட்டிருந்தார். இந்த படத்தில் இருக்கும் இரண்டு சண்டைக் காட்சிகளையும் அப்பா பார்த்திருக்கிறார். எனவே இந்த படம் எனக்கு மிக மிக நெருக்கமான படம். படைத்தலைவன் படத்தைக் கும்கி அல்லது வேறு எந்த படத்துடனும் ஒப்பிட்டுப் பார்க்க முடியாது. இந்த படம் முற்றிலும் வேறு மாதிரியான கதைக்களத்தைக் கொண்டுள்ளது”
‘என்னுடைய முதல் ஷாட்டே ஐந்து யானைகளுடன் தான்..” எல்லாரும் நான் அப்பா மாதிரி இருப்பதாகக் கூறினார்கள். ஆனால் எனக்கு அப்படியே தெரியவில்லை, அவரை ஈடு செய்ய முடியாது. இந்த படத்திற்காக என்னால் முடிந்தவரை உழைத்துள்ளேன். நிச்சயம் இந்தப் படம் உங்கள் அனைவரையும் கவரும். அனைவருக்கும் நன்றி.
மதுரை வீரன் படத்தின் வெற்றிக்குப் பிறகு நாயகன் சண்முக பாண்டியன் வித்தியாசமான தோற்றத்தில் மாறுபட்ட கதாப்பாத்திரத்தில் இப்படத்தில் நடிக்கிறார். யாமினி சந்தர், கஸ்தூரி ராஜா, முனீஷ்காந்த், கருடாராம், அருள்தாஸ், ஸ்ரீஜித் ரவி, A.வெங்கடேஷ், S.S.ஸ்டான்லி, லோகு N P K S, ஆகியோர் முக்கிய பாத்திரங்களில் நடிக்கின்றனர். இப்படத்திற்கு இசைஞானி இளையராஜா இசையமைத்துள்ளார், அவரது இசையில் மூன்று அற்புதமான பாடல்கள் இப்படத்திற்காகப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இப்படம் வரும் மே மாதம் 23 ஆம் தேதி உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகிறது.