‘திருக்குறள்’ – விமர்சனம்!

கலைச்சோழன், தனலட்சுமி, குணாபாபு, பாடினி குமார், சுகன்யா, சந்துரு, ஓ.ஏ.கே.சுந்தர், சுப்ரமணிய சிவா, கொட்டாச்சி, அரவிந்த் ஆண்டவர், அருவி ஆனந்தன், இந்துமதி, கார்த்தி, யாசர், ஹரிதா ஸ்ரீ உள்ளிட்ட பலரது நடிப்பினில் வெளிவந்திருக்கும் படம், திருக்குறள். எழுதி, யக்கியிருக்கிறார், ஏ.ஜெ.பாலகிருஷ்ணன். இசை மற்றும் பாடல்கள்  – இசைஞானி இளையராஜா. ஒளிப்பதிவு – எட்வின் சகாய்.

திருவள்ளுவர் குறித்த ஆவணங்கள் எதுவும் இல்லை. அதாவது அவரது வாழ்க்கை வரலாறோ, வாழ்ந்த காலமோ உறுதியாக கணிக்கப்படவில்லை. இன்று வரை, அவரைப்பற்றி பல சர்ச்சைகள் இருந்து வருவது குறிப்பிடத்தக்கது. இருப்பினும் அவர் தமிழ்ப்  பண்டிதர்களால் ‘தெய்வப்புலவர்’ பெயரிப்பட்ட பெருமைக்குரியவர். கடைச்சங்க காலத்தில் வாழ்ந்த ஒரு ஈடு இணையற்ற புலவராக அறியப்படுபவர்.

திருவள்ளுவரும் அவரது மனைவி வசுகியும் , அவர்களது மகனுடன் வள்ளுவ நாட்டில், மகிழ்வான வாழ்க்கை வாழ்ந்து வருகின்றனர். ‘உலகப்பொது மறை’ எனப்போற்றப்படும், திருக்குறளினை எழுதத் தொடங்குகிறார். இந்நிலையில், நாடுகளுக்கிடையே போர் உருவாகிறது. அந்த சூழ்நிலையிலும், திருக்குறளை எழுதி மதுரையின் கடைச்சங்க மன்னர்களில் ஒருவரான உக்கிரப் பெருவழுதி பாண்டியன் முன்னிலையில் வெளியிடுகிறார். இது திருவள்ளுவர் வாழ்வில் நடந்த ஒரு பகுதி. இதையே, இயக்குநர் ஏ.ஜெ.பாலகிருஷ்ணன் ‘திருக்குறள்’ திரைப்படமாக கொடுத்திருக்கிறார்.

திருவள்ளுவராக கலைச்சோழனும், அவரது மனைவி வாசுகியாக, தனலட்சுமியும் நடித்துள்ளனர். இவர்களில், தனலட்சுமி ரசிகர்களை, தனது வசீகர கண்களாலும், காதல் வசனங்கள் மூலமாகவும் எளிதில் கவர்ந்து விடுகிறார்.

திருவள்ளுவராக தன்னால் முடிந்தவரை நடித்திருக்கிறார், கலைச்சோழன். அவரது உடல் மொழியும், இனிய தமிழ் உச்சரிப்பும் கவனம் கொள்ள செய்தாலும், பெரிதாக ஈர்ப்பில்லை!

பரிதியாகவும், பவளக்கொடிகொடியாகவும் நடித்துள்ள, குணாபாபு –  பாடினி குமார் ஆகியோரது காதல் காட்சிகளும் பாடல்களும் வெகுஜன ரசிகர்களுக்கானது.

மற்றபடி, சுகன்யா, சந்துரு , ஓ.ஏ.கே.சுந்தர், சுப்ரமணிய சிவா, கொட்டாச்சி, அரவிந்த் ஆண்டவர், அருவி ஆனந்தன், இந்துமதி, கார்த்தி, யாசர், ஹரிதா ஸ்ரீ நடித்துள்ளனர். இவர்களில், ஓ.ஏ.கே.சுந்தர் மனம் நிறைந்த நடிப்பினை கொடுத்துள்ளார்.

இளையராஜாவின் இசையில் பாடல்கள் ரசிக்கும்படியாக இருக்கிறது. எட்வின் சகாய் ஒளிப்பதிவும் அப்படியே.

திருவள்ளுவர் பேசுவது போல் சித்தரிக்கப்பட்ட, ‘தமிழ் மூத்த மொழியா தெரியாது!’ ‘காதல் திருமணம், அதுவே பண்பாடு, கட்டாயம்’. போன்ற சர்ச்சை வசனங்களும் இடம் பெற்றுள்ளது.

இவைகளைத்தவிர குறிப்பிட்டுச்சொல்ல எதுவும் இல்லை! இருப்பினும், தமிழின் பெருமை சொல்லும் ‘திருக்குறள்’ திரைப்படத்தினை, இயக்க முன் வந்த  இயக்குநர் ஏ.ஜெ.பாலகிருஷ்ணன் மற்றும் இப்படம் உருவாக காரணமானவர்களுக்கு பாராட்டுக்கள்.