RTS Film Factory சார்பில், தயாரிப்பாளர்கள் திருமால் லட்சுமணன், T ஷியாமளா தயாரிப்பில், அறிமுக இயக்குநர் சுப்ரமணியன் ரமேஷ் குமார் இயக்கத்தில், நட்டி, அருண் பாண்டியன் இணைந்து நடிக்கும், அசத்தலான கமர்ஷியல் திரில்லர் திரைப்படம் “ரைட்”. வரும் செப்டம்பர் 26 ஆம் தேதி திரைக்கு வரவுள்ள நிலையில், இப்படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு, படக்குழுவினருடன் திரைப்பிரபலங்கள் கலந்துகொள்ள பத்திரிக்கை ஊடக நண்பர்கள் முன்னிலையில் கோலாகலமாக நடைபெற்றது.
இவ்விழாவினில்..,
தயாரிப்பாளர் திருமால் லட்சுமணன் பேசியதாவது..
எங்கள் படத்தில் பணிபுரிந்த நட்டி சார், அருண் பாண்டியன் சார் மற்றும் நடிகர்கள் தொழில்நுட்ப கலைஞர்கள் அனைவருக்கும் நன்றி. இவ்விழாவிற்கு வருகை தந்த உறவுகளுக்கு நட்புகளுக்கும் நன்றி. இயக்குநர் எனது நண்பர், இன்னொரு நண்பர் ஜெயபாண்டி சார். அவர் மூலம் தான் இந்தப்படம் நடந்தது. சுப்பிரமணியன் படம் செய்ய வேண்டும் என்று சொன்ன போது மூவரும் இணைந்து செய்யலாம் என்று தான் படம் ஆரம்பித்தோம். அருண்பாண்டியன் சார் பல வழிகாட்டுதல்களை தந்தார். நட்டி சார் முழுக்க முழுக்க கூட இருந்து ஆதரவு தந்தார். இயக்குநர் ஜெயித்தால் எங்கள் ஊரே சந்தோசப்படும். அனைவரும் திரையரங்கு வந்து படம் பார்த்து ஆதரவு தாருங்கள் நன்றி.
நடிகை அக்ஷரா ரெட்டி பேசியதாவது..,
சினிமாவுக்கு நான் புதுசு ஆனால் தமிழ் மக்களுக்கு என்னைத் தெரியும். பிக்பாஸ் மூலம் என்னை அவர்கள் வீட்டு பெண்ணாக நினைக்க ஆரம்பித்துவிட்டார்கள். அம்மா தான் என்னை முழுதாக பார்த்துக்கொண்டார்கள், அவர்கள் எதிர்பாராமல் மறைந்த பிறகு எப்படி மீடியாவில் சினிமாவில் இருப்பது எனத் தயங்கினேன். ஆனால் இந்த டீம் என்னை மிக ஆதரவாக பார்த்துக் கொண்டார்கள், இப்படி ஒரு டீம் கிடைத்தால் யார் வேண்டுமானாலும் பயப்படாமல் வேலை செய்யலாம். க்ளாம் டாலாக இருக்க கூடாது என நினைத்தேன் படத்தில் மிக அழகான ரோல் தந்தார்கள். நட்டி சாருடன் வேலை பார்த்தது மிக இனிமையான அனுபவம், அருண் பாண்டியன் சாரிடம் நிறைய கற்றுக்கொண்டேன். நீங்கள் எல்லோரும் படம் பார்த்து ரசிப்பீர்கள் என நம்புகிறேன் நன்றி.
நடிகை வினோதினி பேசியதாவது…,
ஊடக நண்பர்களுக்கு முதல் நன்றி, இந்த விழாவிற்கு வருகை தந்த ரவி மரியா சாருக்கு நன்றி. நட்பு பற்றி நிறைய பேசுகிறோம் நான் இந்தப்படத்திற்கு வந்ததற்கும் காரணம் நட்பு தான். மார்க்கஸ் தான் என்னை தொடர்பு கொண்டு இப்படத்தில் கொண்டு வந்தார். அவரை பல காலமாக எனக்குத் தெரியும். ரமேஷ் அவர்களை ஜில்லா படத்தில் பார்த்துள்ளேன், அவர் இப்படி இயக்குநராக, அதுவும் நண்பர்கள் தயாரிப்பில் வருவார் என நினைக்கவில்லை, அவர் முதல், பலருக்கு இது முதல் படமாக அமைவது மிகுந்த மகிழ்ச்சி. 24 நாளில் எடுத்தது எனக்கே தெரியாது, நான் ஏழு நாள் தான் நடித்தேன் பக்காவாக திட்டமிட்டு எடுத்தார்கள். இது எவ்வளவு பெரிய உழைப்பு, என பிரமிப்பாக இருக்கிறது. அருண் பாண்டியன் சார், நட்டி சாரின் நடிப்பு மிகச்சிறப்பாக வந்துள்ளது. இப்படம் கண்டிப்பாக ரசிகர்கள் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் படமாக இருக்கும், அனைவருக்கும் நன்றி.
நட்டி (எ) நட்ராஜ் பேசியதாவது..,
ரைட் ஒரு சுவாரஸ்யமான படம். ரமேஷ் என்னிடம் அஸிஸ்டெண்டாக இருந்தவர், அவர் கதை சொன்ன போதே யார்யாரெல்லாம் நடிக்க வேண்டும் என எழுதியே வைத்திருந்தார். அருண் பாண்டியன் சார் படத்தில் ஒரு கோ டைரக்டர் போல வேலை செய்தார். அவர் அர்ப்பணிப்பிற்கு நன்றி. அக்ஷரா ரெட்டி பாரம்பரியமான குடும்பத்தில் இருந்து வந்தவர், மிக கடுமையாக உழைத்துள்ளார், வாழ்த்துக்கள். யுவினா சிறப்பான நடிப்பை தந்துள்ளார். ஆதித்யாவும் சிறப்பாக செய்துள்ளார். ரோஷனுக்கு நல்ல எதிர்காலம் உண்டு. ரவிமரியா என் சிறந்த நண்பர் அவர் செய்த உதவிகள் ஏராளம் வந்து வாழ்த்தியதற்கு நன்றி. படத்தில் உழைத்த அனைத்து கலைஞர்களும் சிறப்பான உழைப்பைத் தந்துள்ளனர். குணா இசையில் வாழ்ந்துள்ளார். ஆர்ட் டைரக்டர் வேலை பெரியளவில் கண்டிப்பாக பேசப்படும். படத்தின் தயாரிப்பாளர்களுக்கு என் நன்றிகள். அனைவரும் இப்படத்தை தியேட்டரில் வந்து பார்க்க வேண்டும். சமூக அக்கறை மிக்க ஒரு விசயத்தை ரமேஷ் சொல்லியுள்ளார். அனைவரும் ஆதரவு தாருங்கள் நன்றி.
இயக்குநர் பாலசுப்பிரமணியம் ரமேஷ் பேசியதாவது..,
என் இயக்குநர்கள் குழுவிற்கு முதல் நன்றி. என் அம்மா அப்பா, எனக்கு தொழில் கற்றுத்தந்த குருக்களுக்கு நன்றி. எப்போதும் ஊரில் என் நண்பர்கள் எப்போது படம் செய்வாய் எனக் கேட்பார்கள், அதற்கு தயங்கியே நான் எங்கும் போகாமல் இருந்தேன். என் நண்பர் ஜெயபாண்டி தான் திருமால் சாரை அறிமுகப்படுத்தினார், இப்படத்தை தயாரித்ததற்கு திருமால் சாருக்கு நன்றி. நட்டி சார் ஆபிஸில் தான் நான் வாழ்ந்தேன். அவர் தான் நான் இப்படம் செய்யக் காரணம். இப்படம் ஒரே இடத்தில் நடக்கும் கதை நடிகர்களை ஸ்டேஜிங் செய்வது மிகுந்த சவாலாக இருந்தது. குணா மிக அற்புதமான இசையை தந்துள்ளார். தாமு சார் கலை இயக்கத்தில் அசத்தியுள்ளார். மார்க்கஸ் சார் இப்படத்திற்கு முழு சப்போர்ட்டாக இருந்தார். அக்ஷரா மிக கடுமையாக உழைத்தார். நன்றாக நடித்துள்ளார். வினோதினி மேடமுக்கு சொல்லித்தர அவசியமே இல்லை. யுவினா நன்றாக நடித்துள்ளார். ஆதித்யா நிறைய சப்போர்ட் செய்தார். அருண் பாண்டியன் சாரிடம் அன்பிற்கினியாள் படத்தில் நான் வேலை செய்தேன். அவரைப்பார்க்கவே ஆறு மாதம் ஆனது. அவர் என்னை வேண்டாம் என சொல்லத்தான் கதை கேட்கவே ஒப்புக்கொண்டார் ஆனால் அவர் கதை பிடித்து நடிக்க ஒப்புக்கொண்டார். அவருக்கு நன்றி. படம் சிறப்பாக வந்துள்ளது. அனைவருக்கும் பிடிக்கும் உங்கள் ஆதரவைத் தாருங்கள் நன்றி.
எளிய மக்களுக்கு பிரச்சனை என்றால் காவல்நிலையத்தில் உதவி கேட்பார்கள். அந்த காவல் நிலையத்திற்கே ஒரு பிரச்சனை என்றால் என்னவாகும்? என்பது தான் இப்படத்தின் மையம்.
ஜில்லா புலி படங்களில் அசோஷியேட் இயக்குநராக பணிபுரிந்துள்ள சுப்ரமணியன் ரமேஷ்குமார் இப்படம் மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார். பரபரப்பான சம்பவங்களை கோர்த்து, விறுவிறுப்பான திரைக்கதையில், அசத்தலான கமர்ஷியல் திரில்லராக இப்படத்தை உருவாக்கியுள்ளார்.
இப்படம் வரும் வரும் செப்டம்பர் 26 ஆம் தேதி உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.