‘யாரு போட்ட கோடு’ டிசம்பர் 12 ஆம் தேதி வெளியாகிறது!

‘டீச்சர்ஸ் ஸ்டிக் புரொடக்‌ஷன்ஸ்’ சார்பில், டாக்டர்.வினிதா கோவிந்தராஜன் தயாரிப்பில், அறிமுக இயக்குநர் லெனின் வடமலை இயக்கத்தில், அறிமுக நடிகர் பிரபாகரன் நாயகனாகவும், மேஹாலி மீனாட்சி நாயகியாகவும் நடித்திருக்கும் திரைப்படம் ‘யாரு போட்ட கோடு’. இசைக்கவிஞர் செளந்தர்யன் மற்றும் ஜெய் குமார் ஆகியோர் இசையமைத்திருக்கும் இப்படத்திற்கு ஜான்ஸ் வி.ஜெரின் ஒளிப்பதிவு செய்திருக்கிறார். ஸ்ரீராம்  படத்தொகுப்பு செய்திருக்கிறார். தீனா, ராதிகா, சிவாஜி ஆகியோர் நடனக் காட்சிகளை வடிவமைக்க, மிரட்டல் செல்வா சண்டைக்காட்சிகளை வடிவமைத்திருக்கிறார். கார்த்திக் பி.ஆர்.ஓ-வாக பணியாற்றுகிறார்.

சமூகத்திற்கு தேவையான கருத்தை தாங்கி உருவாகியிருக்கும் இப்படம் வரும் டிசம்பர் 12 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ள நிலையில், இப்படத்தின் இசை மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா சிறப்பாக நடைபெற்றது.

நிகழ்ச்சியில் தயாரிப்பாளர் டாக்டர்.வினிதா கோவிந்தராஜன் பேசுகையில்,

’யாரு போட்ட கோடு’ படத்தை தயாரித்தது சவால் நிறைந்த அனுபவமாக இருந்தது. மற்ற படங்களின் தயாரிப்பாளர்கள் எப்படி தயாரித்தார்கள் என்று தெரியவில்லை. ஆனால், எங்கள் பட தயாரிப்பில் நிறைய பிரச்சனைகள் இருந்தது. அது அனைத்தையும் சமாளித்து வெற்றிகரமாக தயாரித்ததற்கு நிறைய பேரின் ஒத்துழைப்பு இருக்கிறது. என் படக்குழுவுக்கு முதலில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். சிறப்பு நன்றி, கலைஞர் டிவி சுந்தரம் சார் மற்றும் விநியோகஸ்தர் சாருக்கு. இந்த படத்தின்  CONCEPT ரொம்பவே வித்தியாசமாக இருக்கும், நிச்சயம் அனைவருக்கும் பிடிக்கும். உங்கள் ஒத்துழைப்பு தேவை, நன்றி.” என்றார்.

படத்தின் இயக்குநர் லெனின் வடமலை பேசுகையில்,

‘வாழ்க்கையில் உற்சாகம் முக்கியம், எப்போதும் உற்சாகமாக இருக்க வேண்டும். இந்த படத்திற்கு ஆண்டவன் தான் இயக்குநர். ஆண்டவனுக்கும், எங்களுக்கும் இடையே இருக்கும் தொடர்பு தான் தயாரிப்பாளர். இயக்குநர் குழு ராஜேஷ் அண்ணன், 65 வயதில் இளைஞராக எனக்கு பக்கபலமாக இருந்தார். நான் இதில் கடைசி உதவி இயக்குநராக தான் பணியாற்றினேன். இந்த படத்தில் பெரிய நடிகர் நடிப்பதாக இருந்தது,

ஒரு படம் இயக்குவதற்கு ஆயிரம் போராட்டம், படம் கிடைத்த பிறகு ஐயாயிரம் போராட்டம், படம் முடிந்த பிறகு பன்மடங்கு போராட்டம், இந்த போராட்டங்கள் அனைத்தையும் நான் காட்சியாக தான் பார்த்தேன், விளையாட்டாக எடுத்துக் கொண்டேன். ரசித்தேன், மனிதர்களை படித்தேன். ஒரு படம் பண்ண அசுர பலம் வேண்டும், இயக்குநர் ஸ்தானத்தில் இருப்பவர்களுக்கு அசுர பலம் வேண்டும். என்கரேஜ் பண்றவர்களை பக்கத்தில் வைத்துக் கொள்ள வேண்டும், கெட்ட வைபை தள்ளி வைக்க வேண்டும். டாக்ஸிக் மக்களிடம் இருந்து பாதி தள்ளி வைத்தாலே பாதி வெற்றி கிடைக்கும், முழுவதுமாக தள்ளி வைத்தால் எங்கேயோ போய் விடலாம்.அதனால், நான் டாக்ஸிக் மனிதர்களை தள்ளி வைத்திருக்கிறேன்.

இந்த படத்திற்கு இரண்டு கண்களை போல் இரண்டு இசையமைப்பாளர்கள் இசையமைத்திருக்கிறார்கள். இசையமைப்பாளர் செளந்தர்யன் மற்றும் இசையமைப்பாளர் ஜெயக்குமார் இசையமைத்திருக்கிறார்கள். இருவரது பாடல்களும் மிக சிறப்பாக வந்திருக்கிறது.

படத்தில் மக்களுக்கு தேவையான நல்ல விசயங்கள் பற்றி சொல்லியிருக்கிறேன். காற்று பேதம் பார்க்காமல் அனைவருக்கும் நன்மை தருகிறது. நீர் எந்தவித பாகுபாடு இன்றி அனைவரது தாகத்தை தீர்ப்பதோடு, மற்ற தேவைகளுக்கும் பயன்படுகிறது. இந்த பூமியும் அப்படி தான் மனிதர்களுக்கு மட்டும் இன்றி அனைத்து ஜீவராசிகளையும் வாழ வைக்கிறது. ஆகாயமும் இப்படி தான். பஞ்ச பூதங்கள் அனைத்தும் இப்படி பேதம் பார்க்காமல், பெரியவன், சிறியவன் பார்க்காமல் இருக்கும் போது, அதனை உள்ளடக்கிய மனிதன் மட்டும் ஏன் சாதி, பேதம் பார்க்க வேண்டும், என்ற கேள்வி தான் இந்த படம். அனைவரும் சமமாக, சமத்துவத்தோடு வாழ வேண்டும் என்பது தான் ‘யாரு போட்ட கோடு’ படம். நன்றி.” என்றார்.

நாயகன் பிரபாகரன் பேசுகையில்,

“சினிமா எனக்கு தொடர்பு இல்லாத நிலையில், வி.இசட்.துரை அண்ணன் மூலமாக தலைநகரம் 2 படத்தை தயாரித்தோம். எனக்கு அரசியல் தான் தொழில். எனக்கு சினிமா தெரியாது. லெனின் ஊருக்கு வந்த போது, என்னை நடிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். நடிக்க தெரியாமல் நடித்திருக்கிறேன். அனைத்து நல்ல விசயங்களையும் கீழ் மட்டத்தில் இருந்து சொல்ல வேண்டும் என்பதை சொல்கிறது. அதனால் தான் பள்ளி மாணவர்களிடம் இருந்து நல்லவற்றை ஆரம்பிக்க வேண்டும், இந்த நாட்டில் சமத்துவமாக  வாழ வேண்டும், என்ற கருத்தை தான் படம் பேசுகிறது.

பெரிய நடிகர்கள் பேச்சும், அவர்களது கருத்தும் தான் அனைத்து மக்களிடமும் சென்றடைகிறது. ஆனால், இதுபோன்ற நல்ல விசயங்களை சிறிய நடிகர்கள் சொன்னால் அது சென்றடைவதில்லை. எனவே ஊடக நண்பர்கள் இந்த படத்தை மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும். நான் சினிமாவில் ஜெயிக்க வேண்டும், தொடர்ந்து படம் நடிக்க வேண்டும் என்பதற்காக இதை உங்களிடம் கேட்கவில்லை. குழந்தைகளிடம் இருந்து நல்ல விசயத்தை தொடங்கினால் எதிர்காலத்தில் அவர்கள் நல்லவர்களாக வாழ்வதால் நாட்டில் குற்றங்கள் ஏற்படாது, என்ற கருத்தை சொல்லியிருக்கும் இப்படத்தை மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும், நன்றி.” என்றார்.

நாயகி மேகாலி மீனாட்சி பேசுகையில்,

“முதலில் தினா மாஸ்டருக்கு நன்றி சொல்லனும், அவர் இங்கே இல்லை, இருந்தாலும் அவருக்கு என் நன்றிகள். லெனின் சார் நடிகராகவும், இயக்குநராகவும் இந்த படத்தில் பணியாற்றியிருக்கிறார். எனக்கு நிறைய விசயங்களை பொறுமையாக சொல்லிக் கொடுத்தார், அவருக்கு நன்றி. தயாரிப்பாளர் மேடம் எனக்கு துணையாக இருந்தார், அவருக்கு என் நன்றி. நாயகன் பிரபாகரன் நன்றாக நடித்திருக்கிறார். நாயகன் பிரகாரன் சாருக்கு நன்றி. எனக்கு உறுதுணையாக இருந்து நல்லபடியாக ஒத்துழைப்பு கொடுத்தார். அவருக்கு முதல் படம் போல் இருக்காது, எதிர்காலத்தில் அவர் நிறைய படங்களில் நடிக்க வேண்டும், என்று வாழ்த்துகிறேன். ராதிகா மாஸ்டருக்கு நன்றி. மலைப்பிரதேசங்களில் படப்பிடிப்பு நடந்தது, அதற்கு காரணம் தொழில்நுட்ப கலைஞர்களின் கடுமையான உழைப்பு தான். யார் போட்ட கோடு டிசம்பர் மாதம் வெளியாகிறது, அனைவரும் திரையரங்கிற்கு சென்று பார்க்க வேண்டும்.” என்றார்.

‘யாரு போட்ட கோடு’ படத்தை தமிழகம் முழுவதும் ஃப்ரைடே பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில் பிரபல விநியோகஸ்தர் அஜய் வெளியிடுகிறார்.