‘வடம்’  – விமர்சனம்!

நரேன், அவரது மகன் விமல் இருவரும் மாடுகளின் மேல் அன்பு செலுத்தி வருபவர்கள். அடிமாட்டுக்கு செல்லும் மாடுகளை வாங்கி பராமரித்து வருபவர்கள். வட மஞ்சுவிரட்டு எனும் காளை விளையாட்டின் மீதும் ஆர்வம் கொண்டவர்களாக இருந்து வருகிறார்கள். இவர்களுக்கு நேர்மாறாக இருப்பவர், நட்டி நட்ராஜ். இவரும் காளை மாடுகளை வளர்ப்பதிலும், வட மஞ்சுவிரட்டில் ஈடுபாடும் கொண்டவர். ஆனால், வெற்றி மட்டுமே இவரது ஒரே குறிக்கோள். வெற்றி பெறாத மாடுகளை வெறுப்பவர். இவர், மாற்றுத்திறனாளியாக இருக்கும் ஒரு கன்றை கைவிடுகிறார். அந்த கன்றினை வாங்கி அன்போடு வளர்த்து வரும் விமல், அதை வட மஞ்சுவிரட்டுக்கு தயார் படுத்தி சுமார் 50 தடவைகளுக்கும் மேலாக வெற்றிபெறச்செய்து வருகிறார். இதனால், ஆத்திரமடையு நட்டிநட்ராஜ் அந்த மாட்டையும், விமலையும் கொலை செய்ய திட்டமிடுகிறார். மறுபுறம், சனஸ்கா ஸ்ரீயும் விமலை கொல்ல திட்டமிடுகிறார். இதன் பிறகு, என்ன நடந்தது? என்பது தான், வடம் படத்தின் கதை!

பொதுவாகவே விமலுக்கு கிராமம் சார்ந்த கதைக்களம் எப்போதுமே கை கொடுக்கும். அதை உறுதி படுத்துவது போல். வடம் படத்தின் கதையும், கதைக்களமும் அமைந்துள்ளது. அதை பயன் படுத்திக்கொண்டு கதாபாத்திரத்திற்கேற்ற நடிப்பினை வெளிப்படுத்தியுள்ளார். தோல்வியை வெறுக்கும், பழி வாங்கத்துடிக்கும் கதாபாத்திரத்தில் நட்டி நட்ராஜ், பாராட்டும்படி நடித்துள்ளார். நாயகி சனஸ்கா ஸ்ரீயும் குறிப்பிடும்படி நடித்துள்ளார். வழக்கமான நாயகி போல் அல்லாமல், கதைக்குள் பங்கு பெறும் நாயகியாக நடித்துள்ளார். பால சரவணனின் காமெடி, திரைக்கதை சோர்வின்றி செல்வதற்கு பயன்பட்டுள்ளது. சிரிக்கவும் வைக்கிறார். சற்றே வித்தியாசமான கதாபாத்திரத்தில் முனீஸ் காந்த், அதை நன்றாகவே பயன்படுத்திக் கொண்டுள்ளார். நரேன், இந்துமதி, மது சூதனன், தீபா சங்கர் போன்றோரும் திரைக்கதைக்கு பலம் சேர்த்துள்ளனர்.

டி இமானின் இசையில் பாடல்களும் பின்னணி இசையும் நன்றாக இருக்கிறது. குறிப்பாக வட மஞ்சுவிரட்டு நடக்கும் காட்சிகளை சிறப்பாக மாற்றுகிறது. பிரசன்னா எஸ் குமாரின் ஒளிப்பதிவும் படத்திற்கு பலம் சேர்க்கிறது. போட்டி நடக்கும் காட்சிகளில் ஒளிப்பதிவு சிறப்பு. எழுதி இயக்கியிருக்கும் இயக்குநர் கேந்திரன் வி, விலங்குகளின் மேல் அன்பு செலுத்த வலியுறுத்தி, மாடுகள் மனிதர்களின் வாழ்க்கையின் ஒர் அங்கம் என்பதை, உணர்ச்சிகரமாக பதிவு செய்திருக்கிறார்.

வடம் – விமலுக்கு வெற்றிப் படம்