BV Production நிறுவனத்தின் கீழ், இயக்குநர் பாபு விஜய் தயாரித்து இயக்க, நடிகர் ஜெய் நடிப்பில், இன்றைய சமகால பிரச்சனைகளை அழுத்தமாகப் பேசும் புதுமையான ரொமான்டிக் திரில்லராக உருவாகியுள்ள திரைப்படம் “சட்டென்று மாறுது வானிலை”,இப்படத்தில் நாயகியாக மீனாட்சி கோவிந்தராஜன் நடித்துள்ளார். இவர்களுடன் யோகி பாபு, கருடா ராம், ஸ்ரீமன் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
மனித வாழ்வில் தொடர்ந்து நிகழும் அதிர்வுகள், ஆச்சரியங்கள் மற்றும் உணர்வுகளின் பயணமே இப்படத்தின் மையக் கருத்தாக அமைந்துள்ளது. மேலும், நாட்டில் நடைபெறும் மற்றும் நடைபெறவிருக்கும் முக்கிய பிரச்சனைகளை இப்படம் தைரியமாக எடுத்துரைக்கிறது.வரும் மே 15 ஆம் தேதி திரைக்கு வரவுள்ள இப்படத்தின் முன் வெளியீட்டு விழா, சென்னையில் மடந்தது..
இந்நிகழ்வில் நாயகன் ஜெய் பேசுகையில்,
” நடிகர் ஜெய், “என் நெஞ்சில் குடியிருக்கும்… இப்படி எந்த மேடையிலாவது பேச வேண்டும் என ஆசை. என்னிடம் எனக்கு பிடித்த இயக்குனர் யார் என்று கேட்டால் எப்போதுமே தான் சொல்லும் ஒரே பெயர் ஏ.ஆர். முருகதாஸ் தான்.அவருடைய படங்களில் நடிக்கும்போது அவருடைய குணாதிசயங்களையும் பழக்கவழக்கங்களையும் நான் கவனித்துப் பின்பற்றுவேன். எங்கேயும் எப்போதும் படத்தின் தயாரிப்பாளர் ஏ.ஆர். முருகதாஸ் சார்தான். அவர் அந்தப் படத்தின் ஷூட்டிங் போது ஒன்று கூறினார். அதை இப்போதும் நான் பின்பற்றுகிறேன். ‘ஷூட்டிங் சமயத்தில் சீக்கிரம் தூங்குங்கள், இல்லையென்றால் கண்ணுக்குக் கீழ் வரும் கரு வளையங்களை மறைக்க மேக்கப் போட வேண்டியிருக்கும், அது ஒளிப்பதிவாளரின் வேலையையும் பாதிக்கும்’ எனச் சொன்னார்.

அவரின் அந்த ஆலோசனையை இன்றுவரை நான் கடைபிடிக்கிறேன். எனக்கு இன்னும் கல்யாணம் ஆகலை. ஆனாக்கூட ஷூட்டிங் அப்போ என் மனைவிகிட்ட முருகதாஸ் சார் சொல்லிருக்கார் சீக்கிரம் தூங்கணும்னு சொல்லிடுவேன். மூக்குத்தி அம்மன் பட மியூசிக் டைரக்டர்தான் இந்தப் படத்திலும் உழைத்திருக்கிறார். அவரின் முதல் 30 விநாடி இசையைக் கேட்டபோதே அவர் ஒரு திறமையான கலைஞர் என்று உணர்ந்தேன். அதற்குச் சான்று ‘அக்காடி’ பாடல். மில்லியன் கணக்கான பார்வைகளைப் பெற்றிருக்கிறது.’மாநாடு’ படத்தின் ஒளிப்பதிவாளர் ரிச்சர்ட் சார்தான் இந்த படத்திலும் பணியாற்றியிருக்கிறார். இது எனக்கு கிடைத்த அதிர்ஷ்டம். இரவு பகல் பாராது உழைக்கும் அவரின் அர்ப்பணிப்பை வியப்புக்குரியது. தயாரிப்பாளர் படத்தின் தரத்திற்குத் தேவையான இடங்களில் மட்டுமே செலவு செய்யும் குணம் கொண்டவர்.
இயக்குனர் பாபு விஜய் துடிப்பாக வேலை வாங்குவதில் வல்லவர். படப்பிடிப்பின் போது சோர்வே தெரியாமல் வேலை வாங்குவார். ஏ.ஆர். முருகதாஸ் சாரின் பட்டறையிலிருந்து வந்தவர் என்பதால் அவரிடம் சினிமாவில் ஒரு தனித் தேடல் இருக்கிறது. இந்தப் படத்தில் தளபதி விஜய்யின் தாக்கம் இருக்கும். இந்தக் கதையின்படி நான் ஒரு தீவிர விஜய் ரசிகன் என்பதால், படத்தின் முதல் பாதியில் அவரைப் பிரதிபலிக்கும் சில உடல்மொழிகள் மற்றும் வசனங்கள் இருக்கும். ஆனால் இரண்டாம் பாதி ஒரு சீரியஸான திரைக்கதையை நோக்கி நகரும். இது ஒரு கமர்ஷியல் படமாக மட்டும் இல்லாமல், கதையின் முக்கியத்துவத்தை உணர்த்தும் ஒரு பரிசோதனை முயற்சியாக இருக்கும். “சற்றென்று மாறுது வானிலை” டைட்டிலைப் போலத் தமிழ்நாட்டின் சூழல் இப்போது மாறியுள்ளது. அது மக்களுக்குப் பிடித்தமான ஒன்றாக இருக்கும் என நம்புகிறேன்” இவ்வாறு அவர் பேசினார் .