வாய்ப்புக்காக காத்திருக்கும் முன்னாள் கதாநாயகி  ரம்பா!

வெள்ளித் திரையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், உலக நாயகன் கமல்ஹாசன், தளபதி விஜய், அஜித் குமார் என அத்தனை முன்னணி நடிகர்களுடன் கலக்கிய நட்சத்திர நடிகை ரம்பா, தற்போது கனடாவில் குடும்பத்தோடு வசிக்கிறார். அவரது காலக் கட்டத்தில் நடிக்க  வந்த சிம்ரன், லைலா, ஜோதிகா போன்ற நடிகைகள், மீண்டும் நடிக்க வந்த நிலையில், ரம்பாவுக்கும் நடிக்க ஆசை ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் தெலுங்கு திரையுலகில், அவருக்கு சிறிய கதாபாத்திரங்களில் நடிக்க வாய்ப்பு வந்ததால், அதில் பெரிதாக ஆர்வம் காட்டாமல் இருந்தார். தற்போது  ரம்பா தனது கவனத்தை தமிழ் சினிமா பக்கம் திருப்பியுள்ளார். தன்னுடன் நடித்த நடிகர்களை தொடர்பு கொண்டு நடிக்க வாய்ப்பு கேட்டு வருகிறார்.

இது குறித்து நடிகை ரம்பா கூறுகையில்…

திரையுலகில் வெகு சிலருக்கு மட்டுமே கிடைக்கும் கனவுக் கன்னி அடையாளம் எனக்கு கிடைத்தது. அதை நினைத்து எப்போதும் எனக்கு பெருமை தான். நான் நடிக்கும் காலத்தில் மிக ஜாலியாக சுட்டிப்பெண்ணாக இருந்தேன்.  திருமணத்திற்கு பிறகு  டிவி ஷோக்களில் பங்கு பெற்று வந்தேன். ஆனால், குழந்தைகள் என்னை மிஸ் செய்கிறார்கள். எனத் தெரிந்த போது, நடிப்பதை நிறுத்தி விட்டேன். இரண்டு பெண் குழந்தைகள்,ஒரு பையன் என அழகான குடும்பம்,  ஒரு நல்ல அம்மாவாக மனைவியாகவே இருந்தேன். இப்போது குழந்தைகள் வளர்ந்துவிட்டார்கள். இப்போதும் ரசிகர்கள்  என்னை ஞாபகாமாக கேட்பதும், பாராட்டுவதும் மகிழ்ச்சியாக இருக்கிறது.  அவர்களின் அன்புதான் மீண்டும் நடிக்கலாம், என்ற எண்ணத்தைத் தூண்டியது.

சினிமாவை தொடர்ந்து கவனித்து  கொண்டுதான் இருக்கிறேன், இப்போது சினிமாவின் டிரெண்ட் மாறியிருக்கிறது. ஆனால் சினிமா என்றுமே மாறாது. இப்போதும் சினிமா நண்பர்கள் உடன் பல விசயங்கள்  பேசிக்கொண்டு இருப்பேன், என் வயதுக்கேற்ற வித்தியாசமான கதாப்பாத்திரங்களில்,  நடிக்க வேண்டும். அதற்கான கதைகளை கேட்க ஆரம்பித்துள்ளேன். ரசிகர்கள் என்னை விரைவில் திரையில்  பார்க்கலாம் என்றார்.