மகேஷ் நடிக்கும் ரொமாண்டிக் சைக்கோ த்ரில்லர் ‘ஏவாள்’

அங்காடித்தெரு படத்தில் நாயகனாக நடித்த மகேஷ் பெயர் சொல்லும்படியான நல்லதொரு வாய்ப்புக்காகக் காத்திருந்தார். அப்படி அவர் வித்தியாசமான பாத்திரம் ஏற்றிருக்கும் படம்தான் ஏவாள். மகேஷ் கதை நாயகனாக நடிக்கும் இந்தப் படத்தில் 5 கதாநாயகிகள் நடிக்கிறார்கள்.

பிரதான நாயகியாக மோக்க்ஷா நடித்திருக்கிறார். இவர் அடிப்படையில் ஒரு பரதநாட்டியக் கலைஞர் பெங்காலியில் சில படங்களிலும் தெலுங்கில் இரண்டு படங்களிலும் நடித்தவர்.தமிழில் இவருக்கு இதுதான் முதல் படம். இன்னொரு நாயகியாக கௌரி சர்மா நடித்திருக்கிறார். இவர் பாலிவுட்டில் சில படங்களில் தோன்றியவர். தொலைக்காட்சித் தொடர்களிலும் நடித்துள்ளார்.
இந்திய முன்னணி மாடலான மதுமிதாவும் நடித்திருக்கிறார். மலையாளத்தில் பிருத்விராஜ் படம் உள்ளிட்ட சில படங்களில் நடித்துள்ள அக்ஷரா ராஜ் முக்கியமான பாத்திரத்தில் நடித்துள்ளார். பிரபல மாடல் பர்சிதா சின்காவும் இருக்கிறார். இவர் இப்போது இரண்டு தமிழ்ப் படங்களில் நடித்து வருகிறார். இன்னொரு மாடல் ஆரத்தி கிருஷ்ணாவும் நடித்துள்ளார்.

நீளமான தாடி வைத்துள்ளவர்களுக்கான போட்டியில் உலக அளவில் இரண்டாம் இடமும் இந்திய அளவில் முதலிடமும் பெற்ற ப்ரவீன் பரமேஸ்வரர் இந்தப் படத்தில் ஒரு முக்கியமான பாத்திரம் ஏற்றுள்ளார். இவர்களுடன் மிப்பு, பிரவீன்,மிதுன் ஆகியோரும் நடித்துள்ளனர். இப்படத்தை இயக்கி இருப்பவர் ஜித்தேஷ் கருணாகரன் .

RA1என்டர்டெய்ன்மென்ட் வழங்கும் இந்த ‘ஏவாள்’ படத்தை ஏஜிஎஸ் என்டர்டெய்ன்மென்ட் நிறுவனம் தயாரித்துள்ளது. ஆரத்தி கிருஷ்ணா மற்றும் ஆர்.எல் ரவி தயாரித்துள்ளனர். இணைத் தயாரிப்பு மது ஜி , மற்றும் எஸ் . எஸ்.பிரபு.

படம் குறித்து இயக்குநர் ஜித்தேஷ் கருணாகரன் கூறியதாவது…

தனது காதலியின் திடீர் மரணத்துக்குக் காரணம் முகம் மறைத்துத் திரியும் சைக்கோ கொலைகாரன் என்ற உண்மை நாயகனுக்குத் தெரிய வருகிறது. அவனைப் பழி வாங்க புறப்படுகிறான் நாயகன்.இதற்கிடையில் பில்லி சூனியம் ஏவல் போன்ற அமானுஷ்ய சக்திகள் விளையாடுகின்றன. இதன் பின்னணியில் பரபரப்பாகச் செல்கிற படம் தான் ‘ஏவாள்’. என்றார்.

இப்படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழா விரைவில் நடைபெற இருக்கிறது.