புகைப்பிடிப்பது பெருமைக்குரிய விஷயமல்ல! – அல்லு அர்ஜூன்

மொத்த உலகினையும் அச்சுறுத்தி வரும் கொரோனா, எந்தவிதமான இணை நோய்கள் இல்லாதவரையும் காவு வாங்கிவருவது மருத்துவ உலகில் பெரும் சவாலாக உள்ளது.

இந்நிலையில் புகை பிடிப்பவர்களுக்கு கொரோனா வந்தால் அவர்கள் இறப்பது உறுதி. இதனையடுத்து எல்லோரும் புகைப்பிடிப்பதை தவிர்க்க பலதரப்பினரும் பிரச்சாரம் செய்து வருகின்றனர்.

திரையுலகில் ரஜினிகாந்த், அஜித்குமார், விஜய் உள்ளிட்ட பல நடிகர்களும் புகைபிடிக்கும் காட்சியில் நடித்து அவர்களது ரசிகர்களை புகைப்பிடிக்க துண்டுகின்றனர் என்ற குற்றச்சாட்டும் அவ்வபோது எழுவது உண்டு.

தற்பொழுது புகை பிடிப்பதால் ஏற்படும் கெடுதல்கள் குறித்து, நடிகர் அல்லு அர்ஜுன் தனது ரசிகர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த முயற்சி மேற்கொண்டுள்ளார். மேலும் அவரது ரசிகர்கள் புகை பிடிக்கக் கூடாது எனவும் வேண்டுகோள் வைத்துள்ளார்.

இதுகுறித்து அல்லு அர்ஜுன் கூறுகையில், “புகை பிடிப்பதின் தீமைகளை குறித்து கவனத்தை ஈர்க்க விரும்பினேன். 90களின் காலகட்டத்தில் மேற்கத்திய கலாச்சாரத்தால் நாம் ஈர்க்கப்பட்டபோது தான் புகை பிடிக்கும் பழக்கம் அதிகமானது. அந்த காலத்தில் அது ஒரு பெருமைக்குரிய விஷயமாக கருதப்பட்டது.

தற்பொழுது 2021-ல் கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு மத்தியிலும் புகை பிடிக்கும் பழக்கம் உச்சத்தில் உள்ளது. இதற்க்கு மனஅழுத்தமும் ஒரு முக்கிய காரணமாக கூறப்படுகிறது. இதை மாற்ற என்னால முடிந்த ஒரு சிறு முயற்சியை மேற்கொண்டுள்ளேன்.

கொரோனா வைரஸ் பாதிப்பு இன்னும் குறையாமல் இருப்பதாலும், மேலும் மூன்றாம் அலைக்கான சாத்தியக்கூறு அதிகமாக இருப்பதாக கூறப்படுவதாலும் ஆரோக்கியமான வாழ்க்கையின் முக்கியத்துவத்தை வலியுறுத்த விரும்பினேன்.

எனது குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுக்கு புகை பிடிப்பதால் ஏற்படும் தீமைகளை குறித்து நான் எடுத்துரைத்து வருகிறேன். சிறிய அளவில் நாம் செய்யும் மாற்றம் கூட நம்மை சீரான மற்றும் ஆரோக்கியமான பாதைக்கு அழைத்து செல்லும் நான் நம்புகிறேன்,” என்றார்.

இப்படிச்சொல்லும் அல்லு அர்ஜூனே பல படங்களில் புகைபிடித்தபடி நடித்துள்ளது குறிப்பிடதக்கது.

அல்லு அர்ஜுன் தற்போது ‘புஷ்பா’ படத்தில் நடித்து வருகிறார். விரைவில் இத்திரைப்படம் பல்வேறு மொழிகளில் வெளியாக உள்ளது.