சென்னை – பாண்டிச்சேரி இடையில் நடக்கும் ‘டேக் டைவர்ஷன்’

சென்னையிலிருந்து பாண்டிச்சேரி செல்லும் கார் பயணத்தில் நடக்கிற கதையாக உருவாகி இருக்கிறது ‘டேக் டைவர்ஷன்’ படம். இப்படத்தை சிவானிசெந்தில் இயக்கியிருக்கிறார். சிவானி பிலிம்ஸ் சார்பில் சுபா செந்தில் மற்றும் நண்பர்களுடன் இணைந்து தயாரிக்கிறார்.

‘திருமலை தென்குமரி’ முதல் ‘பையா’ வரை பயண வழிக் கதைகளைக் கொண்ட பல படங்கள் வெற்றி பெற்றுள்ளன. அந்த வரிசையில் சேரும் அளவிற்கு நம்பிக்கையோடு உருவாகி வரும் படம் தான்’ டேக் டைவர்ஷன்’.

சென்னை ராயபுரத்தில் ஒரு வெப்பமான பின்புலத்தோடு காட்சிகள் தொடங்க, வழியில் பல்வேறுபட்ட நிலக்காட்சிகள் மாறி பாண்டிச்சேரி கடற்கரை வரை செல்லும் கதை இது. வழியில் பல வர்ண ஜாலங்களாகக் காட்சிகள் திரையில் விரிகிற கதையாக இப்படம் உருவாகியிருக்கிறது.

இப்படத்தை இயக்கி இருக்கும் சிவானி செந்தில் ஏற்கெனவே’கார்கில்’ என்ற படத்தை 2018-ல் இயக்கி இருந்தார் .அந்தப் படம் தமிழில் ஒரே ஒரு கதாபாத்திரம் தோன்றும் படமாக ஊடகங்களில் பேசப்பட்டது. நாயகன் காரில் செல்கிற பயணம் சார்ந்த காட்சிகள் தான் அந்தப் படத்தின் கதையாக இருக்கும்.

 அதே போல் இந்தப் படத்தில் நாயகிக்கு மூன்று பேரால் நடக்கும் பிரச்சினைகள் வரும். அதற்கான தீர்வை நோக்கிச் செல்லும்படி இந்த கதையின் ஓட்டம் இருக்கும். மூன்றாண்டு காலம் அவளுக்கு இருந்த பிரச்சினைகள் அந்த ஒரு நாள் பயணத்தில் தீர்கிறது. எப்படி என்பதுதான் கதையின் போக்கு.

படத்தின் தலைப்பைப் பற்றி இயக்குநர் கூறும்போது,

“நாம் அனைவருமே புறப்பட்ட பாதையிலிருந்து நேராகச் சரியாக அடையவேண்டிய இடத்திற்குப் போய்ச் சேருவதில்லை. காலம் நம்மை மாற்றுப்பாதையில் திசை திருப்பி வேறு ஒரு கிளை பிரித்து அங்கே பயணிக்க வைத்து இறுதியில் தான் அந்த இடத்தை அடைய வைக்கும். அப்படி வாழ்க்கையில் ‘ டேக் டைவர்ஷன் ‘ என்ற வார்த்தைக்குப் பொருள் அனைவரும் அனுபவபூர்வமாக உணர்ந்து இருப்பார்கள். அந்த வகையில்தான் இந்த பெயரை வைத்தேன்.

இதற்கான சரியான தமிழ்ப்பெயர் கிடைக்கவில்லை என்பது ஒரு காரணம். இது ஒரு கலர்ஃபுல்லான படமாக இருக்கும்.  இளமை ததும்பும் காட்சிகள் புதிதாக இருக்கும்” என்றவர்.

“இந்த கொரோனா காலத்தில் அவ்வப்போது படப்பிடிப்பு என்று திட்டமிடாமல் துண்டுதுண்டாக  படப்பிடிப்பு நடத்திக் கொண்டிருக்க முடியாது என்பதால்  ஒரே பயணத்திட்டத்தில் படத்தை முடிப்பது என்ற நோக்கில் ஆரம்பித்தோம். இதோ முடிவடையும் தருவாயில் இருக்கிறது .இந்தப்படத்தில் எத்தனை பேர் இருந்தாலும் சரி கதைதான் ஹீரோ” என்கிறார் இயக்குநர்.

“பயண வழிப் படமாக இந்த படம் ஒரு புதிய அனுபவத்தை தரும். அதற்கு நான் உத்திரவாதம் “என்று  நம்பிக்கையுடன் சொல்கிறார் இயக்குநர் சிவானி செந்தில்.

படத்தின் இறுதிக்கட்ட வேலைகள் நடைபெற்று வருகின்றன.