தேர்தல் ஆணையம், இதைச் செய்யுமா? – தங்கர் பச்சான்

திரைப்பட இயக்குநர், தயாரிப்பாளர், ஒளிப்பதிவாளர், எழுத்தாளர், நடிகர், சூழலியல் செயல்பாட்டாளர் ஆன தங்கர்பச்சான், தன்னுடைய அறிக்கை மூலமாக தேர்தல் ஆணையத்துக்கு கேள்வி விடுத்துள்ளார்.

அதன் விபரம் வருமாறு…

வேட்புமனுவில் எதை எதையோ ஆய்வு செய்து சரிபார்க்கும் தேர்தல் ஆணையம் வேட்பாளரின் உடல் நலனை பரிசோதனை செய்து அதன் பின் தகுதி  உடையவர் என அறிவிப்பதில்லை.

மனுக்களிலுள்ள ஆவணங்களை பரிசீலித்தப்பின் இறுதித் தேர்வாக தேர்தல் ஆணையத்தின் சொந்த செலவிலேயே பரிசோதனை செய்து அதன் பின்னர் தேர்தலில் போட்டியிட இவர் தகுதியானவர் என அறிவிக்க வேண்டும்.

இதனால் இடைத்தேர்தல்கள் நடத்துவதை ஓரளவிற்கு தவிர்க்க முடியும்! அத்துடன்  தேர்ந்தெடுக்கப்படும் வேட்பாளர் அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு  நல்ல உடல்நலத்துடன் இருந்தால்தான் மக்கள் பணியை செவ்வனே ஆற்றவும் முடியும் என்பதையும் நினைவில் கொள்ளவேண்டும். இதைச் செய்யாமல் வெறும் தாள்களில் காண்பிக்கப்படும் ஆவணங்களை கொண்டு வேட்பாளரின் விண்ணப்பங்கள் தகுதியானதாக அறிவிக்கப்படுவது எவ்வகையிலும் சரியானது அல்ல.

உடலிலுள்ள  குறைபாடுகளை மக்களிடமிருந்து மறைத்து அதற்காகவே முழு நேரத்தையும் செலவழிப்பவர்கள் தான் அரசியல் களத்தை காலங்காலமாக கைப்பற்றி  இளைஞர்களுக்கு வழிவிடாமல் ஏமாற்றி வருகிறார்கள்.

ஏற்கெனவே ஏறக்குறைய ஐம்பது விழுக்காடு வேட்பாளர்கள் குடிமை மற்றும் குற்றவியல் வழக்குகளில் சிக்கி உள்ளவர்கள் என்பதை அனைவரும் அறிவோம்! இந்நிலையில்  இத்தகைய சீர்கேடும் சரி செய்யாமல் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டு நடத்தப்படும் தேர்தலால் முழுமையான மக்களாட்சி மலரப்போவதில்லை.

ஏற்கெனவே எத்தனையோ ஓட்டைகள் கொண்ட தேர்தல் விதிமுறைகளில் இதுதான் மிக முக்கியமான ஒன்றாக கருத வேண்டி உள்ளது.

என, அந்த அறிக்கையில் தங்கர் பச்சான் குறிப்பிட்டுள்ளார்.