‘எஃப்.ஐ.ஆர்.’ திரைப்படம் பிப்ரவரி 11 ஆம் தேதி வெளியாகிறது!

விஷ்ணு விஷால் ஸ்டூடியோஸ் தயாரிப்பில், ரெட் ஜெயன்ட் மூவிஸ் உதயநிதி ஸ்டாலின் வழங்கும் திரைப்படம் “எஃப் ஐ ஆர் (FIR)”, நடிகர் விஷ்ணு விஷால் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகியுள்ள இப்படத்தை இயக்குனர் மனு ஆனந்த் இயக்கியுள்ளார். பரபரப்பான கமர்ஷியல்  திரில்லர் படமாக உருவாகியுள்ள  இப்படத்தை  வரும்  பிப்ரவரி 11 உலகம் முழுவதும்  ரெட் ஜெயண்ட் மூவிஸ் வெளியிடுகிறது.

இந்தப் படத்தில் விஷ்ணு விஷாலுடன் மஞ்சிமா மோகன், ரைசா வில்சன், ரெபா மோனிகா ஜான் என 3 நாயகிகள் நடித்துள்ளனர். இயக்குனர் கௌதம் மேனன் மிக முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

“எஃப் ஐ ஆர் ‘ திரைப்படம் குறித்து  நடிகர், தயாரிப்பாளர் விஷ்ணு விஷால் பேசியதாவது…

எனக்கு எமோஷனல் தருணம் இது. இந்த மேடை மிக முக்கியமான மேடை. என் அப்பா இல்லை என்றால் நான் இங்கு இருந்திருக்க மாட்டேன். எனக்காக நிறைய உழைத்திருக்கிறார். நான் அவரது இடத்தில் இருந்தால் இது போல் செய்திருப்பேனா என்பது தெரியாது, அவருக்கு நன்றி. மனுவை சந்தித்த போது நான் நிறைய படம் பண்ணிட்டேன் ஆனால் இன்னும் புதிதாக ஒரு நடிகராக நல்ல படம் செய்ய வேண்டும் என தோன்றியது. ராட்சசன் படம் இந்திய அளவில் ஒரு நடிகராக ஒரு மரியாதை பெற்று தந்தது. இந்தக் கதை சொன்ன போதே எனக்கு பிடித்திருந்தது.

எனக்கு சையத் முகமது என ஒரு நண்பர் இருந்தார், அவனுக்கு நடந்த சில விஷயங்களை சொல்லும் போது, எனக்கு அதிர்ச்சியாக இருந்தது. நான் வளர்ந்த விதம் வேறு, ஆனால் இந்தக் கதை கேட்ட போது அதை உணர்ந்தேன், இது உண்மையில் நடக்கிறதே, இதை சொல்ல வேண்டும் என தோன்றியது. ஒரு கட்டத்தில் இந்த படம் தயாரிப்பாளர் தயாரிக்க முடியாத சூழ்நிலையில் என்னிடம் வந்து நீங்கள் காத்திருக்க வேண்டும் என உண்மையை சொன்னார் மனு, அவரது நேர்மை பிடித்திருந்தது அதனால் தான் இந்தப்படம் செய்தேன். அவருக்காக தான் இந்தப்படம் செய்தேன்.

இன்று 4 படங்கள் செய்கிறேன், எனக்கு நம்பிக்கை தந்த மனுவுக்கு நன்றி. அவர் கூட்டி வந்தவர் தான் ஷ்ரவந்தி. பேசும்போதே பாஸிட்டிவாக இருந்தார். அவர் என் தங்கையின் இடத்தை பிடித்திருக்கிறார். மனு எப்போதும் என்னை பெரிதாக யோசிக்க சொல்வார். என்னை பெரிதாக மாற்றியிருக்கிறார். நிறைய பேர் படம் பார்த்துவிட்டார்கள், தனுஷ் படம் பார்த்து விட்டார்,  ராட்சசன் படத்தை தாண்டி இந்தப்படத்தில் ஒரு நடிகராக மிரட்டி விட்டீர்கள் என்று பாராட்டினார், ரொம்ப சந்தோஷமாக இருந்தது. அதற்காக அவருக்கு நன்றி. லாக்டவுன் நிறைய டைம் தந்தது, அதனால் எல்லோரும் மீண்டும் மீண்டும் உழைத்து அழகாக இந்தப்படத்தை உருவாக்கியுள்ளோம்.

உதயநிதி ஸ்டாலின்  அண்ணா, செண்பகமூர்த்தி சாருக்கு என் வாழ்நாள் முழுதும் நன்றி சொன்னாலும் பத்தாது, இப்போது இந்தப் படத்திற்காக சொல்லவில்லை,  குள்ளநரி கூட்டம் படத்தையே அவர்கள் தான் ரிலீஸ் செய்து தந்தார்கள், எனக்கு எப்போதும் உறுதுணையாக இருந்துள்ளார்கள்,  இந்தப் படத்தை ரிலீஸ் செய்வதற்கு நன்றி. ரெட் ஜெயன்ட் மூவிஸ் விநியோக நிர்வாகி ராஜா அவர்களுக்கு நன்றி.