பா.ரஞ்சித்தின் அடுத்த படம் ரெடி!

இயக்குநர் பா.இரஞ்சித்தின் “நீலம் புரொடக்‌ஷன்ஸ்”சார்பில் முதன் முதலாக தயாரிக்கப்பட்ட படம் ‘பரியேறும் பெருமாள்’. அவரது உதவியாளர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் விருப்பு வெறுப்பு இல்லாமல் அனைவராலும் பாராட்டப்பட்டது. அதன் தொடர்ச்சியாக இரண்டாவது தயாரிப்பாக உருவாகியுள்ள படம் ‘இரண்டாம் உலகப் போரின் கடைசி குண்டு’.. தினேஷ், ஆனந்தி, ரித்விகா, லிஜீஸ் ஆகியோர் நடித்திருக்கும் இப்படத்தினை பா.இரஞ்சித்திடம் உதவி இயக்குநராக பணியாற்றிய அதியன் ஆதிரை இயக்கி இருக்கிறார்.

‘இரண்டாம் உலகப் போரின் கடைசி குண்டு’ படத்தின் அறிமுக ஒளிப்பதிவாளராக கிஷோர் குமார் பணியாற்றி இருக்கிறார். இவர் “மெட்ராஸ்”, “கபாலி”, “காலா”ஆகிய படங்களுக்கு ஒளிப்பதிவு செய்த முரளியின் உதவியாளர். தன்னுடைய முதல் படத்திலேயே பல சவால்களை சந்தித்து, இயக்குநருக்கான ஒளிப்பதிவாளர் என்கிற நற்பெயரை பெற்றுள்ளார்.

திட்டமிட்டபடி 45 நாட்களில் 40 லொகேஷன்களின் ஷூட்டிங் நடத்தியாக வேண்டிய கட்டாயத்தில் இயக்குநரோடு தோளுக்கு தோளாக நின்று படத்தினை குறித்த நேரத்தில் முடித்து தயாரிப்பாளர், இயக்குநருக்கு  பக்கபலமாக இருந்திருக்கிறார்.

இதுகுறித்து மகிழ்ச்சி தெரிவித்த இயக்குநர் அதியன் ஆதிரை, கிஷோர் குமாரை பாராட்டி தள்ளினார். மேலும் அவர் கூறும்போது..

“நிச்சயமாக இது ஒரு கடினமான பயணம்தான் எங்களுக்கு. 45 நாட்களில் 40 லொகேஷன் என திட்டமிடும் போது மனதிற்குள் ஒரு அச்சம் இருந்தது. ஆனால் அந்த அச்சத்தை போக்கி, திட்டமிட்டபடி முடிப்பதற்கு கிஷோர் கடுமையாக உழைத்தார்” என்று கூறினார்.

‘இரண்டாம் உலகப் போரின் கடைசி குண்டு’ படம் வெளியாவதற்கு முன்பே எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது.