‘நந்திவர்மன்’ விமர்சனம்!

AK Film Factory சார்பில், அருண்குமார் தனசேகரன் தயாரித்துள்ள படம், நந்திவர்மன். இதில், சுரேஷ் ரவி, ஆஷா வெங்கடேஷ், போஸ் வெங்கட், நிழல்கள் ரவி, கஜராஜ், ஆடுகளம் முருகதாஸ், அம்பானி சங்கர் உள்ளிட்ட பலரது நடித்திருக்க, G.V. பெருமாள் வரதன் இயக்கத்தில் வெளியாகியிருக்கிறது.

பல்லவ மன்னர்களில் ஒருவர் நந்திவர்மன். இவர் செஞ்சி பகுதியை ஆட்சி செய்தபோது அங்கே ஒரு சிவன் கோயில் ஒன்றை கட்டியுள்ளார். 1000 வருடங்களுக்கு மேல் பழமையான அந்த கோவில், பூமிக்கு அடியில் மன்னில் புதையுண்டு கிடக்கும் அந்தக் கோவிலின் உள்ளே, விலை மதிப்புமிக்க வாள், நகை குவியல்கள் குவிந்து கிடப்பதாக, அரசின் தொல்லியல் துறைக்கு தெரிய வருகிறது. அதனால்,  தொல்லியல் துறை பேராசிரியர் நிழல்கள் ரவியின் பரிந்துரைப்படி,  தொல்லியல் துறை அதிகாரி போஸ் வெங்கட் தலைமையில், ஒரு குழு, புதையுண்டு கிடக்கும் அந்த கோவிலை கண்டுபிடிக்க வருகிறார்கள். அவர்கள் பூமியைத்  தோண்ட முற்படுகையில் பல அமனுஷ்யமான விஷயங்களும், மர்மமான முறையில் சிலர் கொடூரமாக கொல்லப்படவும் செய்கின்றனர். அதையும் மீறி போஸ் வெங்கெட் குழுவினர் செயல்படுகின்றனர். அதன்பிறகு என்ன நடந்தது? என்பது தான், ‘நந்திவர்மன்’ படத்தின் மீதிக்கதை.

பல்லவ மன்னர்களின் சில வரலாற்று தரவுகளுடன், கதையை மிக நேர்த்தியாக சொல்லியிருக்கிறார், இயக்குனர் G.V. பெருமாள் வரதன். அமானுஷ்யமான காட்சிகளுடன் தொடங்கும் படம், அடுத்தாக என்ன நடக்கப்போகிறது? என்ற ஆவலைத் தூண்டி விடுகிறது.

நாயகனாக நடித்திருக்கும் சுரேஷ் ரவி, போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கதாபாத்திரத்தில் கச்சிதமாக பொருந்துகிறார். சண்டைகாட்சிகளில் சிறப்பு கவனம் பெறுகிறார். இவருக்கும் நாயகியாக நடித்திருக்கும் ஆஷா வெங்கடேஷூக்கும் இருக்கும் காதல் காட்சிகள் குறைவு என்ற போதிலும், ரசிக்கும்படி இருக்கிறது. ஆஷா வெங்கடேஷ், ஒரு சில முகபாவங்கள் மூலமாக ரசிகர்களை கவர்ந்து விடுகிறார்.

போஸ் வெங்கட், நிழல்கள் ரவி, கஜராஜ் போன்றவர்களின் அனுபவமான நடிப்பு, படத்திற்கு பலம் சேர்த்திருக்கிறது. இவர்களைப் போல் சின்னச் சின்ன கதாபாத்திரங்களில் நடித்திருக்கும் மீசை ராஜேந்தர், ஆடுகளம் முருகதாஸ், அம்பானி சங்கர், கோதண்டம், ஜே.எஸ்.கே.கோபி போன்றோரும் குறிப்பிடும்படி நடித்திருக்கிறார்கள்.

ஒளிப்பதிவாளர் ஆர்.வி.சேயோன் முத்துவின் ஒளிப்பதிவு சிறப்பாக இருக்கிறது.

ஜெரால்டு ஃபிலிக்ஸ் இசையில் பாடல்கள், பின்னணி இசை ஓகே.

கலை இயக்குநர் முனிகிருஷ்ணன் பாராட்டப்பட வேண்டியவர். கோவில்கள் சிலைகள் பிரமிப்பினை ஏற்படுத்துகிறது.

அமானுஷ்யப் பிரியர்களுக்கும், மர்மப்படங்களை விரும்பிப் பார்ப்பவர்களுக்கும் ‘நந்திவர்மன்’ பிடிக்கும்.