‘ப்ரின்ஸ்’ படத்தினை குடும்பத்தோடு பார்க்கலாம்! – சிவகார்த்திகேயன்.

சிவகார்த்திகேயன், மரியா, சத்யராஜ் உள்ளிட்ட பலர்  நடித்திருக்கும் படம் ‘ப்ரின்ஸ்’. தீபாவளி பண்டிகையை ஒட்டி வரும் அக்டோபர் 21 அன்று வெளியாகிறது. இந்தப் படத்தினை அனுதீப் இயக்கி இருக்க தமன் இசையமைத்திருக்கிறார்.

சென்னையில் நடைபெற்ற பத்திரிக்கையாளர்கள்  சந்திப்பில் இப்படம் குறித்து நடிகர் சிவகார்த்திகேயன் பேசியதாவது,

“’ப்ரின்ஸ்’ படத்தைப் பொருத்தவரை இது ஒரு எளிமையான கதை. ‘இந்திய பையன் ஒருவன் ப்ரிட்டிஷ் பொண்ணை காதலிக்கறான்’ என்ற ஒரு வரிதான். இதில் அனுதீப் கொடுத்திருக்கும் காமெடி விஷயங்கள்தான் இந்தப் படத்தை பொருத்தவரை நாங்கள் புதிய விஷயமாக பார்க்கிறோம். காமெடி கவுண்ட்டர்கள் என்றில்லாமல், நாம் பேசும்போது சம்பந்தமே இல்லாத வேறொரு பதில் சொல்வது என கதை நகரும். நாங்கள் இந்தப் படத்தில் காட்டியுள்ள ஊர் தமிழ்நாட்டில் எங்குமே கிடையாது. அனுதீப் உருவாக்கிய ஊர் அது. அந்த மக்கள் அனைவரும் அவர்கள் சிந்திப்பதுதான் சரி என்று யோசிப்பார்கள். அப்படியான ஊரில் இருக்கக்கூடிய ஒருவனுக்கு வரும் லக், பிரச்சனைகள் அதை அவன் எதிர்கொள்ளும் விதம் இவைதான் படம். படத்தில் மூன்று பாடல்கள் உள்ளன. எல்லாருக்கும் பிடிக்கும்படியான ஜாலியான படம் இது.

தீபாவளிக்கு குடும்பங்களாக பார்க்கும்படியான எண்டர்டெயின்மெண்ட்டான படம். இன்னொரு பக்கம் கார்த்தியின் ‘சர்தார்’ படம் வெளியாகிறது. இரண்டு படங்களும் முற்றிலும் வேறான கதைக்களம். இரண்டு படங்களின் வெற்றிக்கும் வாழ்த்துகள். அனுதீப் தெலுங்கில்தான் யோசிப்பார். இதை தமிழ்- தெலுங்கு என இரண்டு மொழிகளுக்கு ஏற்ற மாதிரி கொண்டு போய் சேர்ப்பதுதான் எங்கள் முன் இருந்த சவால். தீபாவளிக்கு மூன்று நாட்கள் முன்னால் அக்டோபர் 21 அன்று வெளியாகிறது. தீபாவளி அன்று வெளியாகும் என்னுடைய முதல் படம் இது. இதற்கு முன்னால் சின்ன வயதில் இருந்து 20 வருடங்களாக தீபாவளி அன்று வெளியாகும் அனைத்து ஹீரோக்களின் படங்களையும் பார்த்திருக்கிறேன். இப்போது என்னுடைய படத்தைப் பார்க்க போகிறேன் என்பது மகிழ்ச்சி” என்றார்.

படத்தின் கதாநாயகி மரியா பேசியதாவது,

” இந்த வாய்ப்பு கொடுத்ததற்கு முதலில் அனுதீப் சாருக்கு நன்றி சொல்ல விரும்புகிறேன். ஸ்பெஷல் தேங்க்ஸ் சிவா சாருக்கு. அவருடன் வேலை செய்வது என்பது மிகவும் எளிமையான ஒன்று. எல்லாருமே என்னிடம் மிகவும் நன்றாக பழகினார்கள். உங்கள் அன்புக்கு நன்றி. இந்தப் படம் மிகவும் ஜாலியான பார்த்து ரசிக்க கூடிய ஒரு திரைப்படம்” என்றார்.

இயக்குநர் அனுதீப் பேசியதாவது,

“என்னுடைய முந்தைய படமான ‘ஜதி ரத்னலு’ முடித்துவிட்டு இதன் திரைக்கதை எழுதும்போது சிவா சார் நடித்தால் நன்றாக இருக்கும் என்று தோன்றியது. சிவா சாருக்கும் என்னுடைய ’ஜதிரத்தினலு’ படம் பார்த்து பிடித்திருந்தது. அவரிடம் பேசும் பொழுது காமெடி மட்டும் இல்லாமல் நல்ல மெசேஜ் இருக்க வேண்டிய கதையாக வேண்டும் என்றார். இந்த படம் ஒரு பண்டிகை மூடில் எல்லோரும் சிரித்து கொண்டாடும் விதமாக வந்துள்ளது. இதற்கு முன்பு பாரதிராஜா, பாலச்சந்தர் ஆகியோரின் நிறைய தமிழ் படங்களை பார்த்து இருக்கிறேன். எனக்கும் ஒரு தமிழ் படம் இயக்க வேண்டும் என்று ஆசை இருந்தது. இந்த வாய்ப்பை இவ்வளவு சீக்கிரம் கொடுத்த சிவா சாருக்கு நன்றி. தீபாவளியன்று எல்லோரும் திரையரங்குகளில் இந்த பாடத்தை பார்த்த மகிழுங்கள்” என்றார்.