“ஜிவியின் இசைதான் என் படத்தின் ஆன்மா”: ‘இருமுடி கட்டு’ வெற்றி விழாவில் ரவி தேஜா நெகிழ்ச்சி!

டி-சீரிஸ் பிலிம்ஸ் வழங்க, மைத்ரி மூவி மேக்கர்ஸ் சார்பில் நவீன் யெர்னேனி மற்றும் ஒய். ரவி சங்கர் தயாரிப்பில், இயக்குநர் சிவா நிர்வாணா இயக்கத்தில் வெளியாகியுள்ள திரைப்படம் ‘இருமுடி கட்டு’. மாஸ் மகாராஜா ரவி தேஜா, பிரியா பவானி சங்கர் மற்றும் சிறுமி நக்‌ஷத்ரா ஆகியோர் முதன்மைக் கதாபாத்திரங்களில் நடித்துள்ள இத்திரைப்படம், கடந்த ஆகஸ்ட் 21 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி தெலுங்கு, தமிழ் உள்ளிட்ட தென்னிந்திய மொழிகளில் மிகப்பெரிய பாக்ஸ் ஆபீஸ் வெற்றியைப் பெற்றுள்ளது.இதனைத் தொடர்ந்து, படத்தின் பிரம்மாண்ட வெற்றிக் கொண்டாட்டப் பத்திரிகையாளர் சந்திப்பு நேற்று சென்னையில் உள்ள ஒரு முன்னணி நட்சத்திர ஹோட்டலில் படக்குழுவினர் முன்னிலையில் சிறப்பாக நடைபெற்றது.

இவ்விழாவில் படத்தின் இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ் குமார் பேசியதாவது:

“ஒரு திரைப்படத்திற்கு இசையமைக்க அதன் அசல் கதைக்களம் மிகவும் முக்கியமானது. நான் பணியாற்றிய ‘பொல்லாதவன்’ மற்றும் ‘ராஜா ராணி’ ஆகிய திரைப்படங்களின் கதையைக் கேட்டபொழுதே, இவை நிச்சயம் பாக்ஸ் ஆபீஸில் மிகப்பெரிய பிளாக்பஸ்டர் ஆகும் என எனக்குத் தோன்றியது. அதுபோலவே, இந்த ‘இருமுடி கட்டு’ திரைப்படத்தின் கதையைக் கேட்டபோதும் இது தமிழ் மற்றும் தெலுங்கு ரசிகர்களிடம் மிகப்பெரிய வெற்றியைப் பெறும் என்று எனக்கு ஆழமாகத் தோன்றியது.

தமிழ் திரையுலகில் இருக்கும் பல முன்னணி கதாநாயகர்களும், இயக்குநர்களும் மாஸ் மகாராஜா ரவி தேஜா சாரின் தீவிர ரசிகர்கள் ஆவர். திரையுலகில் ‘பாட்ஷா’ திரைப்படத்தில் நடிகர் ரஜினிகாந்துக்கு எப்படி ஒரு தனித்துவம் இருந்ததோ, அது போலவே கமர்சியல் ஆக்ஷன் திரைப்படங்களில் ரவி தேஜா சாருக்கும் ஒரு அசாத்திய தனித்துவம் இருக்கிறது. இத்திரைப்படத்தின் மூலம் இயக்குநர் சிவா நிர்வாணாவின் மேக்கிங்கிற்கு என்று தமிழில் தனி விசிறிப் பட்டாளமே உருவாகிவிடும். இப்படத்தில் அசாத்தியமாக நடித்துள்ள குழந்தை நட்சத்திரம் பேபி நக்‌ஷத்ரா, தனது நடிப்புக்காகப் பல விருதுகளைப் பெறுவார் என்று நான் ஆவலுடன் எதிர்பார்க்கிறேன். ஒட்டுமொத்தக் குடும்பத்துடனும் திரையரங்குகளில் ரசிக்க வேண்டிய தரமான படைப்பு இது” என்றார்.

பத்திரிகையாளர் சந்திப்பின் முத்தாய்ப்பாகப் படத்தின் நாயகன் ரவி தேஜா தனது நன்றிகளைப் பகிர்ந்து பேசியதாவது:

“இத்திரைப்படத்தின் பிரம்மாண்ட வெற்றிக்கு உழைத்த அத்தனை தொழில்நுட்பக் குழுவினருக்கும் எனது மனமார்ந்த நன்றிகள். இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ் குமாரின் அசாத்தியமான பாடல்களும், பின்னணி இசையும்தான் இந்த ‘இருமுடி கட்டு’ திரைப்படத்தின் உண்மையான ஆன்மாவாக (Soul) அமைந்துள்ளது. தெலுங்கில் இத்திரைப்படம் மிகப்பெரிய ஹிட்டாகி வசூல் சாதனை படைத்து வருகிறது.படத்தில் மகளாக நடித்திருக்கும் நக்‌ஷத்ராவுக்குத் திரையுலகில் ஒரு மிகச்சிறந்த எதிர்காலம் உண்டு; பிரியா பவானி சங்கரும் தனது எதார்த்தமான நடிப்பால் பாத்திரத்திற்கு வலு சேர்த்துள்ளார். இத்தகைய ஒரு முற்போக்கான கதையைத் தயாரிக்க முழு ஆதரவு கொடுத்த மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பாளர்களுக்கு எனது நன்றி. இயக்குநர் சிவாவை எனக்கு மிகவும் பிடிக்கும்; அதற்கான முக்கியமான காரணத்தை இப்படத்தின் அடுத்த மெகா வெற்றி விழாவில் நான் விரிவாக உடைக்கிறேன். தமிழ் ரசிகர்கள் அனைவரும் திரையரங்குகளில் படம் பார்த்துவிட்டு உங்களது கருத்துக்களைச் சொல்லுங்கள்” என்று கேட்டுக்கொண்டார்.

படத்தின் இயக்குநர் சிவா நிர்வாணா பேசியதாவது:

“திரையரங்குகளை விட்டு ரசிகர்கள் வெளியேறும் பொழுது, தங்களது நிஜ வாழ்க்கைக்கு எடுத்துச் செல்லக்கூடிய ஏதேனும் ஒரு நல்ல விஷயம் அந்தப் படத்தில் இருக்க வேண்டும். படம் பார்த்து முடித்ததும், அதன் எமோஷனல் தாக்கத்தால் தியேட்டரை விட்டு வெளியேறும் ஒவ்வொரு ஆண மகனும் தங்களது மகள் மற்றும் மனைவியைப் பற்றி நிச்சயம் ஒரு நிமிடம் யோசிப்பார்கள்” என்றார்.

நாயகி பிரியா பவானி சங்கர் தனது அனுபவங்களைப் பகிர்ந்து பேசியதாவது:

“ஒரு பிரம்மாண்ட மாஸ் கதாநாயகனின் திரைப்படம் என்ற போதிலும், வணிக சமரசங்களுக்காகத் திரைக்கதையில் எவ்வித மாற்றமும் செய்யாமல், தனக்குச் சொன்ன கதையை அப்படியே நேர்மையாக இயக்குநர் சிவா திரையில் கொண்டு வந்துள்ளார். அப்பா மற்றும் மகள் பாசம் இருக்கும் அத்தனை இடங்களிலும் இந்த ‘இருமுடி கட்டு’ திரைப்படம் மிகப்பெரிய வெற்றியைப் பெறும்” என்றார்.குழந்தை நட்சத்திரம் பேபி நக்‌ஷத்ரா, தயாரிப்பாளர் ஒய். ரவி சங்கர், வசனகர்த்தா விஜய் பாலாஜி, ஒளிப்பதிவாளர் விஷ்ணு ஷர்மா மற்றும் பாடலாசிரியர் பாலாஜி வேணுகோபால் ஆகியோரும் விழாவில் கலந்துகொண்டு படத்தின் தொழில்நுட்ப வெற்றிகளைப் பகிர்ந்து கொண்டனர்.