சசிகுமார்  வெளியிட்ட ‘ரகட் பாய் காதல்’ மியூசிக்  ஆல்பம்!

‘ரகட் பாய் காதல்’ என்கிற பெயரில் ஒரு கிராமத்து மியூசிக் ஆல்பம் உருவாகியுள்ளது. இந்த ஆல்பத்தை ‘ ஸ்டார் மியூசிக்’  உலகமெங்கும் வெளியிட்டுள்ளது.

பொறுப்பின்றி கோயில் காளையாக முரட்டுத்தனமாக அடங்காதவனாக வேலையின்றி பொறுப்பின்றித் திரியும் ஒரு கிராமத்து வாலிபன் காதலில் விழுகிறான். கட்டுக்கடங்காத காளையாக இருந்தவனைக் காதல் எப்படிக் கட்டுத்தறிக் காளையாக மாற்றுகிறது என்பதுதான் இந்தப் பாடலின் மையக்கருத்து.

ஒரு திரைப்படக் கதைக்கான முன்னோட்டமாக இந்த இசை ஆல்பம் உருவாகி இருக்கிறது. இதை ஸ்ரீ வித்தகன் இயக்கி உள்ளார் ‘மூவி மெக்கானிக்’ நிறுவனம் தயாரித்துள்ளது. இதில் கதாநாயகனாக நடித்துத் தயாரித்துள்ளவர் அஜய் கிருஷ்ணா. இவர் நாடோடிகள், நிமிர்ந்து நில்,போராளி, தரணி, அனுக்கிரகன், கடப்புறா கலைக்குழு போன்ற படங்களில் நடித்துள்ளார். கட்டம் போட்ட சட்டை என்கிற படத்தையும் தயாரித்து வருகிறார். நாயகியாக நடித்துள்ளவர் ஸ்மிருதி வெங்கட். இவர் மூக்குத்தி அம்மன், வானம், தீர்ப்புகள் விற்கப்படும், மாறன், மன்மத லீலை, தேஜாவு போன்ற படங்களில் நடித்திருப்பவர்.

இந்த இசை ஆல்பத்தை இயக்கியுள்ளவர் ஸ்ரீ வித்தகன். இவர் இயக்குநர் சமுத்திரக்கனியிடம்  உதவி இயக்குநராகப் பணியாற்றியவர்.  நாடோடிகள் ,நிமிர்ந்து நில், போராளி,வினோதய சித்தம் போன்ற படங்களில்   பணிபுரிந்தவர்.

டி.எம். உதயகுமார் இசையமைக்க  பாடல்களை பிரியங்கா , ஜித்தின் ராஜ் பாடியுள்ளனர். ஆல்பத்தின் பாடலை ராஜா குருசாமி எழுதியிருக்கிறார். இந்த ஆல்பத்திற்கு ஒளிப் பதிவு செய்துள்ளவர் அருண்குமார் .

பொதுவாக ஆல்பம் என்றாலே நகரப் பின்னணியில் உருவாவதுண்டு. இது ஒரு கிராமத்துக் காதல் கதை . கிராமியப் பின்னணியில் அழகுற காட்சிகள் உருவாக்கப்பட்டுள்ளன. திருவள்ளூர், திருநின்றவூர், பூண்டி அணைக்கட்டு போன்ற இடங்களில் படப்பிடிப்பு நடைபெற்றுள்ளது.

இந்த இசை ஆல்பத்தை நடிகரும், இயக்குநருமான சசிகுமார் , நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் இருவரும் சமூக ஊடகங்களில் வெளியிட்டுள்ளார்.