பெப்சி அமைப்புக்கு எதிராக, பட அதிபர்கள் புதிய அமைப்பை தொடங்கினர்!

தென்னிந்திய திரைப்பட தொழிலாளர் சம்மேளனமான பெப்சிக்கும், தயாரிப்பாளர்கள் சங்கத்திற்கும் இடையே தொழிலாளர்களின் ஊதிய உயர்வு விவகாரம், இரு அமைப்பிற்கும் இடையேயான புரிந்துணர்வு ஒப்பந்தம் ரத்து, உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகளின் காரணமாக நிலவி வரும் மோதல்  தற்போது உச்சகட்டத்தை எட்டி உள்ளது.

இந்நிலையில்,முரளி.என்.ராமசாமி தலைமையில் இயங்கி வரும்  தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கம்,ஆர்.கே. செல்வமணி தலைமையிலான  பெப்சி அமைப்புக்கு போட்டியாக  “தமிழ்நாடு திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளனம்” உதயமாக உள்ளதாகவும்,இதன் மூலம் தயாரிப்பாளர்கள் தங்களின் திரைப்படங்களுக்கு விரும்பும் தொழிலாளர்களை வைத்து தயாரித்துக் கொள்ளலாம் என்றும் அதிரடியாக அறிவித்துள்ளது.

இது குறித்து தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது, “தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத்துடன் ஏற்படுத்திக்கொண்ட புரிந்துணர்வு ஒப்பந்தத்தை ரத்து செய்வதாக தென்னிந்திய திரைப்படத் தொழிலாளர்கள் சம்மேளனம் கடந்த 20.12.2024 அன்று பத்திரிகை வாயிலாக அறிவித்துள்ளது. மேலும், உறுப்பினர்களை வைத்து சம்மேளன வேலை செய்யும் சம்மேளனம் தயாரிப்பாளர்களுடன் தொழிலாளர்கள் ஒத்துழைப்பு வழங்கும் என்று தெரிவித்துள்ளார்கள். அதனை சம்மேளனத்தில் தொடர்ந்து, தொழிலாளர்கள் இணைக்கப்பட்டுள்ள சங்கங்களுக்கு கடந்த 27.01.2025 அன்று சுற்றறிக்கை ஒன்றும் அனுப்பியுள்ளார்கள். அதில், தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத்துடனான புரிந்துணர்வு ஒப்பந்தம் ரத்து செய்ததை சுட்டிகாட்டி மீண்டும் உறுதிபடுத்தியுள்ளார்கள்.

அவ்வகையில், தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் தங்களின் திரைப்படங்களுக்கு தாங்கள் விரும்பும் தொழிலாளர்களை வைத்து தங்களது திரைப்படங்களின் படப்பிடிப்புகளை நடத்திக் கொள்ளலாம் என தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கம் தெரிவித்துக் கொள்கிறது. தயாரிப்பாளர்கள் பயன்பெறும் வகையில் “தமிழ்நாடு திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளனம்” என்ற ஒரு அமைப்பு உருவாக்கும் கட்டத்திற்கு நமது சங்கம் வந்துள்ளது.

தயாரிப்பாளர்கள் தங்களின் திரைப்படங்களுக்கு விரும்பும் தொழிலாளர்களை வைத்து தயாரித்துக் கொள்ளலாம் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறோம். மேலும், இது சம்பந்தமாக நாளிதழ்களில் விளம்பரம் வரவுள்ளது. அதேசமயம் மேற்படி அமைப்பில் சேர்ந்து பணியாற்ற விரும்பும் தொழிலாளர்கள் விளம்பரத்தினை பார்த்து அதில் இருக்கும் முகவரியை தொடர்பு கொள்ள வேண்டுமாய் கேட்டுக் கொள்கிறோம்” இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது .இது தமிழ் திரையுலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.