கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில், ஸ்டோன்பெஞ்ச் பிலிம்ஸ் கார்த்திகேயன் சந்தானம் தயாரிப்பில், ரெட் ஜெயின்ட் மூவீஸ் வெளியீட்டில் ராகவா லாரன்ஸ் மற்றும் எஸ் ஜே சூர்யா உள்ளிட்டோர் நடிப்பில் தீபாவளியை முன்னிட்டு நவம்பர் 10 அன்று வெளியாகி சூப்பர் டூப்பர் ஹிட் அடித்திருக்கும் ‘ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்’ திரைப்படத்தின் இணை தயாரிப்பாளர்கள் கல் ராமன் எஸ் சோமசேகர், கல்யாண் சுப்பிரமணியம் மற்றும் அலங்கார் பாண்டியன் ஆவர். இப்படத்தின் நன்றி தெரிவிப்பு விழா சென்னையில் வெள்ளிக்கிழமை (நவம்பர் 17) நடைபெற்றது. நிகழ்ச்சியின் முக்கிய அம்சங்கள் வருமாறு:
சட்டானி பாத்திரத்தில் நடித்த விது பேசியதாவது…
வந்திருக்கும் அனைவருக்கும் நன்றி. பத்திரிகையாளர் நண்பர்கள் அனைவருக்கும் நன்றி. வாழ்த்து சொன்ன அனைவருக்கும் நன்றி. சீனியர்களுடன் நடித்தது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. லாரன்ஸ் சார் மற்றும் எஸ் ஜே சூர்யா அவர்களுடன் நடித்ததில் மிகவும் மகிழ்ச்சியாக உணர்கிறேன்.
நடிகர் நவீன் சந்திரா பேசியதாவது…
பத்திரிகையாளர் நண்பர்களுக்கும் இந்த வெற்றியை கொடுத்த ஸ்டோன் பெஞ்ச் பிலிம்ஸ் நிறுவனத்திற்கும் மிகப்பெரிய நன்றி. எனக்கே என்னுடைய கேரக்டர் மீது வெறுப்பு வரும் அளவிற்கு கதை இருந்தது. எஸ் ஜே சூர்யா சார் மற்றும் லாரன்ஸ் சாருடன் நடித்தது மறக்க முடியாத அனுபவம். இந்த பாத்திரத்தை எனக்கு கொடுத்த கார்த்திக் சுப்புராஜ் சாருக்கு மிக்க நன்றி. ‘ஜிகர்தண்டா’ திரைப்படம் பார்த்தவுடன் கார்த்திக் சுப்புராஜ் சார் திரைப்படத்தில் ஒரு சீன் மட்டுமாவது நடிக்க வேண்டும் என்று ஆசைப்பட்டேன், இந்த திரைப்படத்தில் மிகப்பெரிய கதாபாத்திரம் கொடுத்ததற்கு மிகவும் நன்றி.
நடிகர் மற்றும் இயக்குநர் எஸ் ஜே சூர்யா பேசியதாவது…
வெற்றியை பகிர வேண்டிய நேரம் இது. பத்திரிகை மற்றும் ஊடக நண்பர்களுக்கு நன்றி. மதுரை, திருச்சி, கோவை உள்ளிட்ட ஊர்களுக்கு சென்று தியேட்டர் ரெஸ்பான்ஸ் எப்படி இருக்கிறது என்று பார்த்தோம். ரசிப்புத் தன்மை தற்போது முன்பை விட மிகவும் அதிகமாகி உள்ளது. ஒரு நகைச்சுவை காட்சிக்கு கைத்தட்டல் வரலாம், ஆனால் உணர்ச்சிப்பூர்வமான காட்சிகளுக்கு வரும் போது ரொம்ப ரொம்ப சந்தோஷமாக உள்ளது.
இப்படத்தை வெளியிட்ட ரெட் ஜெயின்ட் நிறுவனத்திற்கு மிக்க நன்றி. “நம்ம பேசக்கூடாது, நம்ம படம் பேசனும்” என்று கார்த்திக் சுப்பராஜ் சொல்வார். அதே மாதிரி இந்த படம் பேசுகிறது. லாரன்ஸ் அவர்கள் எனது மிகப்பெரிய நண்பர், நல்ல மனிதர், நல்ல பெயரை அவர் சம்பாதித்திருக்கிறார். தயாரிப்பாளர் கார்த்திகேயன் சந்தானம் அவர்களின் குழுவினர் அனைவருக்கும் நன்றி. இந்த திரைப்படத்தில் எல்லாமே நன்றாக அமைந்தது. அனைவருக்கும் பிடித்த மாதிரி அமைந்திருக்கிறது. நல்ல கதையை இயக்குநர் திரையில் காட்டியிருக்கிறார்.
நடிகர் ராகவா லாரன்ஸ் பேசியதாவது…
இந்த படம் எனக்கு பெரிய வெற்றியை கொடுத்திருக்கிறது. என் உள் மனது சொன்ன மாதிரி இந்த படத்தின் நாயகன் கார்த்திக் சுப்புராஜ் தான். இந்த படத்திற்கு கடவுளின் ஆசிர்வாதம் நிறைய உள்ளது. சட்டானி கதாபாத்திரத்தில் நடித்த விதுவிற்கு மிகப்பெரிய பாராட்டுகள். ரெட் ஜெயின்ட் நிறுவனத்திற்கு மிகவும் நன்றி.
நிறைய பேர் இந்த படத்தை பாராட்டி உள்ளனர். என்னுடைய குரு சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் சார் அவர்கள் வாழ்த்தியதற்கு மிகவும் நன்றி. ராகவேந்திரா சுவாமியை நேரில் பார்த்ததில்லை, ரஜினிகாந்த் அவர்களை என்னுடைய ராகவேந்திரா சுவாமியாக நினைக்கிறேன். என் ரசிகர்கள் அனைவருக்கும் நன்றி. என் அம்மா பெயரில் ஒரு பெரிய கல்யாண மண்டபம் கட்டப் போகிறேன். அதற்கு உங்கள் வாழ்த்துகள் தேவை. நன்றி.
இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் பேசியதாவது…
அனைவருக்கும் வணக்கம், இந்த திரைப்படத்தின் மீது எனக்கு பெரிய நம்பிக்கை இருந்தது, அதே சமயம் பதட்டமும் இருந்தது. உங்கள் அனைவரின் ஆதரவோடும் இன்று ‘ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்’ மாபெரும் வெற்றி பெற்றிருப்பது மிக்க மகிழ்ச்சி. இந்த படத்தை திரையரங்கில் பார்த்த அனைவருக்கும் நன்றி. படத்தின் தலைப்பை வழங்கிய ஃபைவ் ஸ்டார் கிரியேஷன்ஸ் திரு கதிரேசன் அவர்களுக்கு நன்றி. இதில் பணியாற்றிய அனைவருக்கும் நன்றி. ஸ்டோன் பெஞ்ச் பிலிம்ஸ் கார்த்திகேயன் சந்தானம் அவர்களுக்கு நன்றி. லாரன்ஸ், எஸ் ஜே சூர்யா, நிமிஷா சிறப்பாக நடித்திருந்தனர். சட்டானி கதாபாத்திரம் அவ்வளவு சுலபம் இல்லை. அந்த வேடத்தில் நடித்த விது மிகவும் கஷ்டப்பட்டு நடித்தார்.
இந்த படத்திற்கு கடவுளின் ஆசிர்வாதம் நிறைய இருக்கிறது. நிறைய விஷயங்கள் நடந்தன. இதன் காட்சிகளை நாங்கள் செதுக்கவில்லை, எல்லாம் கடவுளின் அருளால் தானாக அமைந்தது. ஒன்றரை வருடத்திற்கு முன்னால் இந்த கதையை பற்றி பேசிக்கொண்டு இருந்தோம், இன்று இது திரையில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. தனிப்பட்ட முறையில் தொலைபேசியில் வாழ்த்து தெரிவித்த நடிகர் தனுஷ், இயக்குநர்கள் ஷங்கர், நெல்சன், மாரி செல்வராஜ் உள்ளிட்ட பலருக்கு நன்றி. என்னுடைய தலைவர் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் என்னை பாராட்டி உள்ளார். ‘பீட்சா’ மற்றும் ‘மெர்குரி’ படங்களுக்கு பாராட்டிய ஒரே நபர் தலைவர் மட்டும் தான். நன்றி தலைவா. மாபெரும் ஆதரவளித்துள்ள பத்திரிகையாளர்களுக்கு நன்றி.