தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வந்தவர், நடிகர் பிரஷாந்த். காதல், ஆக்ஷன், செண்டிமெண்ட் என அனைத்து ஏரியாக்களிலும் ஆல்ரவுண்டரான இவர், ‘அந்தகன்’ படத்தில் நடித்து முடித்துள்ளார். விரைவில் வெளியாகவுள்ள இப்படத்தினை தொடர்ந்து, விஜய்யின் ‘கோட்’ படத்தில் மிக முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இது தவிர்த்து, பெயரிடப்படாத பல படங்களில் நடிக்கவிருக்கிறார். அது குறித்த பேச்சு வார்த்தை நடந்து வரும் நிலையில், பிரஷாந்த் தனது பிறந்தநாளை, ரசிகர்கள் மற்றும் பத்திரிகையாளர்கள் முன்னிலையில் கொண்டாடினார். இதில், ஏராளமான ரசிகர்கள் கலந்துக்கொண்டு அவருக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தனர்.
இந்த பிறந்த நிகழ்ச்சியில் பேசிய நடிகர் பிரஷாந்த்,
‘நான் எப்போதும் என் குடும்பமாக நினைக்கும் பத்திரிகையாளர்கள், ரசிகர்களுக்கு வணக்கம். என் பிறந்த நாளன்று என் ரசிகர் மன்ற சகோதரர்கள் பல நற்பணிகளை செய்து வரும் நிலையில், மக்களிடம் தலைக்கவசம் குறித்த விழிப்புணர்வினை ஏற்படுத்துவதுடன் அவர்களுக்கு இலவசமாக தலைக்கவசம் வழங்கி வருகிறார்கள்.
முதல் கட்டமாக தூத்துக்குடி, திருநெல்வேலி, மதுரை ஆகிய பகுதிகளில் தொடங்கியவர்கள், தற்போது சென்னையில் என் பிறந்தநாளில் தொடங்கியிருக்கிறார்கள். அனைவரும் தலைக்கவசம் அணிய வேண்டும், அது நமக்கான பாதுகாப்பு.
பத்திரிகையாளர் நண்பர்கள் இருசக்கர வாகனத்தில் செல்கிறார்கள், அவர்களுக்கு தெரியும் தலைக்கவசம் எவ்வளவு முக்கியம் என்பது, இருந்தாலும் இதை நான் ஒரு அறிவுரையாக இல்லாமல், ஒரு தகவலாக அவர்களுக்கும் சொல்லிக்கொள்கிறேன். கோடைக்காலம் தொடங்கிவிட்டாலும் சற்று சிரமம் பார்க்காமல் தலைக்கவசம் அணியுங்கள், அது நமக்கு மட்டும் அல்ல நமது குடும்பத்திற்கு பாதுகாப்பானது. அதேபோல் நிறைய தண்ணீர் குடியுங்கள்
பாராளுமன்ற தேர்தல் வருகிறது, அனைவரும் தவறாமல் ஓட்டு போடுங்கள், ஓட்டு மிகவும் முக்கியமானது’. என்ற அவர், மேலும் கூறியதாவது..
மிக பிரமாண்டமான திரைப்படமாக ‘அந்தகன்’ னை உருவாக்கியிருக்கிறோம். இப்படத்தின் வெளியீடும் பிரமாண்டமாக இருக்க வேண்டும் என்பதற்காகவே, அதற்கான சரியான நேரத்திற்காக காத்திருக்கிறோம். நிச்சயம் விரைவில் ‘அந்தகன்’ மிகப்பெரிய அளவில் வெளியாகும்.” என்றார்.
பிரஷாந்தின் தந்தையும், நடிகருமான தியாகராஜன் பேசுகையில்,
“நான் தினமும் மாலையில் உடற்பயிற்சி செய்வேன், பிறகு குடும்பத்துடன் நேரம் செலவிடுவேன், அதன் பிறகு பத்திரிகையாளர்களை சந்திப்பேன், இது தான் என்னுடைய வாழ்க்கை. அப்போது எனது பழைய அலுவலகத்தில் பெரிய மைதானம் இருக்கும், அதில் தான் நான் எப்போதுமே பத்திரிகையாளர்களை சந்திப்பேன். அப்படி என்னுடைய அந்த பழக்கத்தை பிரஷாந்தும் அவராகவே கத்துக்கிட்டார். நான் எதுவும் சொல்லவில்லை, அவரே எனது வழியை பின்பற்றி பத்திரிகையாளர்களிடம் நட்பாகவும், எளிமையாகவும் பழக ஆரம்பித்து விட்டார். அவருடன் எந்த நேரத்திலும் பத்திரிகையாளர்கள் நேரடியாக பேசலாம், அவர் மேனேஜர் எல்லாம் வைத்துக்கொள்ள மாட்டார். இதை நான் சொல்லிக்கொடுக்கவில்லை, அவராகவே கத்துக்கிட்டார்.
கதை தேர்வில் கூட நான் தலையிட மாட்டேன், அதனால் தான் பிரஷாந்த் நிறைய புதுமுகங்களை அறிமுகப்படுத்தினார். அவராகவே கதை கேட்பார், அந்த கதை பிடித்திருந்தால் என்னிடம் சொல்வார். நான் புதிய இயக்குநராக இருக்கிறாரே என்று சொன்னால், கதை கேளுங்கள் நன்றாக இருக்கிறது, என்பார். அப்படி தான் இயக்குநர் ஹரி உள்ளிட்ட பல புதிய இயக்குநர்களை பிரஷாந்த் அறிமுகப்படுத்தினார். அந்த வகையில், அவர் தற்போது பல புதிய படங்களில் நடிக்க இருக்கிறார். அதற்கான அறிவிப்பை வெளியிடுவதற்காகவே ஒரு சிறப்பு பத்திரிகையாளர்கள் சந்திப்பு வைக்க இருக்கிறோம், அதில், அவரது அடுத்தடுத்த படங்கள் குறித்து அறிவிப்போம்.” என்றார்.