திரைப்பட இயக்குநர் எஸ். யூ. அருண் குமாருக்கும், ஏ. அஸ்வினி என்பவருக்கும் இரு தரப்பு பெற்றோர்களின் சம்மதத்துடன் நேற்று மதுரையிலுள்ள ஹெரிடேஜ் நட்சத்திர ஹோட்டலில் திருமணம் நடைபெற்றது. இந்த திருமணத்திற்கு தமிழ் திரையுலகிலிருந்து ஏராளமான பிரபலங்கள் கலந்துகொண்டு மணமக்களுக்கு நேரில் வாழ்த்து தெரிவித்தனர்.
‘பண்ணையாரும் பத்மினியும்’ என்ற படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் இயக்குநராக அறிமுகமானவர் எஸ். யூ. அருண்குமார். இப்படத்தின் வெற்றிக்குப் பிறகு விஜய் சேதுபதி நடிப்பில் ‘சேதுபதி’, ‘சிந்துபாத்’ என இரண்டு படங்களை தொடர்ந்து இயக்கினார். பிறகு சித்தார்த் நடிப்பில் வெளியான ‘சித்தா’ திரைப்படத்தையும் இயக்கியிருந்தார். இவர் தற்போது சீயான் விக்ரம் நடிப்பில் தயாராகி வரும் ‘வீர தீர சூரன்’ எனும் திரைப்படத்தினை இயக்கி வருகிறார். இந்நிலையில் இவருக்கும், ஏ. அஸ்வினி என்ற பட்டதாரி பெண்ணிற்கும் பெற்றோர்களின் சம்மதத்துடன் திருமணம் நிச்சயமானது. இதனைத் தொடர்ந்து நேற்று மதுரையில் உள்ள ஹெரிடேஜ் நட்சத்திர ஹோட்டலில் பெற்றோர்கள் – நண்பர்கள்- உறவினர்கள்- திரையுலக பிரபலங்கள் – முன்னிலையில் திருமணம் கோலாகலமாக நடைபெற்றது.
இந்த திருமணத்திற்கு முன்னணி திரையுலக பிரபலங்களான சீயான் விக்ரம், மக்கள் செல்வன் விஜய் சேதுபதி, இயக்குநர் வெற்றிமாறன், எஸ் ஜே சூர்யா, சித்தார்த் , தயாரிப்பாளர் ஷிபு தமீன்ஸ், இயக்குநர் விக்னேஷ் சிவன், சுராஜ் வெஞ்சரமூடு, நடிகை துஷாரா விஜயன்,தயாரிப்பாளர் அருண் விஷ்வா, இயக்குநர் பூ சசி, இயக்குநர் சதீஷ், விவேக் பிரசன்னா, பால சரவணன், ஜி.கே பிரசன்னா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு மணமக்களுக்கு வாழ்த்து தெரிவித்தனர்.