விதார்த், சரவணன், அருந்ததி நாயர், ஹலோ கந்தசாமி, ஜார்ஜ் மரியன், பாரதி கண்ணன், வெற்றிவேல் ராஜா, பவன் ராஜ், செம்மலர் அண்ணம், தமிழ்செல்வி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். படம் ஆரம்பம் முதல் இறுதி வரை, ரசிகர்களை சிரிக்க வைப்பதை மட்டுமே குறிக்கோளாக வைத்து, அதில் ஜெயித்தும் இருக்கிறார், அறிமுக இயக்குநர் ரவி முருகையா.
அரசு கொடுத்த இலவசங்களையும், ரேசன் கடைகளின் மூலம் கிடைக்கும் பொருட்களை வைத்து, எந்த வேலைக்குமே செல்லாமல், இருந்து வருபவர் பருத்தி வீரன் சரவணன். இவரது சகோதரியின் மகன் விதார்த். இவர்கள், இருவரும் அரசு தரும் மான்யத்திற்காக கழிப்பறை கட்ட முடிவு செய்து அதற்காக குழி தோண்டுகின்றனர். இந்த குழிக்குள், சோழர் காலத்திய தங்கக் காசுகள் நிறைந்த குடம் கிடைக்கிறது. இந்த புதையல் விஷயம் ஊரில் உள்ள சிலருக்கும் தெரிய வருகிறது. இதை பிரித்து கொள்ள நடக்கும் சண்டையில் ஒருவர் கொலை செய்யப்படுகிறார். அதன் பிறகு என்ன நடந்தது? என்பதை, நகைச்சுவையாக சொல்வது தான், ‘ஆயிரம் பொற்காசுகள்’ படத்தின் கதை.
படம் ஆரம்பித்து சில காட்சிகள் தவிர்த்து, இறுதிவரை நகைச்சுவையை மட்டுமே நம்பி, அதில் ஜெயித்தும் இருக்கிறார், அறிமுக இயக்குனர் ரவி முருகையா. பிரதான கதாபாத்திரங்களான விதார்த் சரவணன் மட்டுமின்றி படத்தில் நடித்த அனைவருமே சிறப்பான பங்களிப்பினை கொடுத்துள்ளனர். லாஜிக்கை மறந்து விட்டு, நீங்கள் ஆயிரம் பொற்காசுகள்’ படத்தினை பார்த்தால், காட்சிக்கு காட்சி குலுங்க குலுங்க சிரிப்பீர்கள்!
எந்த கதாபாத்திரத்திற்கும் முக்கியத்துவம் தராமல், அனைத்தையும் திரைக்கதையின் போக்கிலேயே கொண்டு சென்றிருப்பது படத்தின் பலம்.
கதாநாயகனாக விதார்த், நாயகியாக அருந்ததி நாயர், அவருடைய அம்மாவாக நடித்திருக்கும் தமிழ் செல்வி, அரசு தரும் இலவசங்களின் மூலம் சோம்பேறியாக நடித்திருக்கும் பருத்திவீரன் சரவணன், மயானத்தில் வேலை செய்யும் தொழிலாளர்களான ஜார்ஜ் மரியன், பவன்ராஜ், மீன் வியாபாரி ஹலோ கந்தசாமி, போலீஸ் இன்ஸ்பெக்டராக பாரதி கண்ணன், ஊராட்சிமன்றத் தலைவராக கர்ணராஜா, பொற்கொல்லர் வெற்றிவேல் ராஜா, பாம்பு பிடிப்பவராக ஜிந்தா என அனைவருமே சிறப்பாக நடித்திருக்கின்றனர். குறிப்பாக ‘பொற்கொல்லர்’ கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் வெற்றிவேல் ராஜா, உங்களை வயிறு குலுங்க சிரிக்க வைப்பார்.
அறிமுக இயக்குநர் ரவி முருகையா ‘ஆயிரம் பொற்காசுகள்’படத்தினை காமெடி படத்தினை விரும்பிப் பார்ப்பவர்களுக்கு நிச்சயம் பிடிக்கும்!