அமெரிக்க தூதரகத்தில் பணிபுரிந்த நடிகர் ஶ்ரீகாந்த்! – சிவகுமார் பகிர்ந்த நினைவலைகள்!

தமிழ் சினிமாவின் பழம்பெரும் மூத்த நடிகர் ‘தங்கப்பதக்கம்’ 82 வயதான ஸ்ரீகாந்த் நேற்று காலமானார்.  இவர் இயக்குநர் பாலச்சந்தர் இயக்கத்தில் பல மேடை நாடகங்களில் நடித்திருக்கிறார். அதில் ‘மேஜர் சந்திரகாந்த்’ எனும் வெற்றிகரமான நாடகத்தில் இவருடைய கதாபாத்திரத்தின் பெயர் ‘ஸ்ரீகாந்த்’. அதற்கு பிறகு நிலைத்த அடையாளமாக அந்த பெயர் அமைந்து விட்டது.

இது குறித்து தன் நெடு நாள் நண்பரின் மறைவையொட்டி நடிகர் சிவக்குமார் அவர் குறித்த  நினைவுக்குறிப்புகளை பகிர்ந்துள்ளதாவது…

‘நடிகர் ஶ்ரீகாந்த் 1965 இல் இயக்குநர் ஸ்ரீதர் இயக்கிய  வெண்ணிற ஆடை திரைப்படத்தில் அறிமுகம் ஆனார். இவர் நிறைய படங்களில் சிவாஜி கணேசன், சிவக்குமார், முத்துராமன் , ஜெய்சங்கர் போன்ற நடிகர்களோடு துணைப் பாத்திரங்களில் நடித்தார். பின்னர் ரஜினிகாந்த், கமல்ஹாசன் போன்ற நடிகர்களோடு எதிர் நாயகனாகத் தோன்றினார். தமிழ் சினிமாவின் பெரிய நட்சத்திரங்கள் கலைஞர்கள் போற்றக்கூடிய நடிகராக விளங்கினார்.

எனது அருமை நண்பர் திரு ஶ்ரீகாந்த் 1965 ஏப்ரலில் ஜெயலலிதாவின் முதல் ஜோடியாக ஶ்ரீதரின் ‘வெண்ணிற ஆடை’ படத்தின் கதாநாயகனாக அறிமுகமானார்.  ஈரோட்டில் பிறந்து, அமெரிக்க தூதரகத்தில் பணி புரிந்து, K பாலசந்தரால் மேடை நடிகராக பிரபலமடைந்த வெங்கி என்கின்ற ஶ்ரீதர் , மேஜர் சந்திரகாந்த் என்ற கதையின் நாடகத்தில் நடித்த கதாபாத்திரத்தின் பெயர் தான் ஶ்ரீகாந்த். திரைப்படத்தில் அறிமுகமாகும்போது அதே பெயரையே ஒப்புக் கொண்டு நடித்தார்.

நாகேஷ் நகைச்சுவையில் விஸ்வரூபம் எடுத்தார், வாலி கவிதையால் கரை கண்டார். வறுமையின் கோரப்பிடியில் சிக்கி வாலியும், நாகேஷும் துவக்க நாட்களில் சாப்பாட்டுக்கே திண்டாட்டம் போட்ட போது, தன் கையால் சமைத்து போட்டு, ‘மாம்பலம் கிளப் ஹவுசில்’ இருவரையும் காப்பாற்றியவர் ஶ்ரீகாந்த். கதாநாயகனாக நிற்க முடியவில்லை என்றாலும் ‘சில நேரங்களில் சில மனிதர்கள் , ராஜநாகம்’ போன்ற முக்கிய படங்களில் முத்திரை பதித்தார்.  என்னோடு இணைந்து, ‘மதன மாளிகை, சிட்டுக் குருவி, இப்படியும் ஒரு பெண், அன்னக்கிளி, யாருக்கும் வெக்கமில்லை , நவக்கிரகம்’ என பல படங்களில் நடித்தவர்.

சமீபத்தில் 80 வயது பூர்த்தி அடைந்த விழா கொண்டாடினார். இன்று அவரது ஒரே மகள் மீரா வீட்டில் ஶ்ரீகாந்த் , லீலாவதி , மீரா கணவர் zach அலெக்சாண்டர், பேத்தி காவேரி ஆகியோரையும் சந்தித்து ஓவியம் , சினிமா என்று இரண்டு காஃபி டேபிள் புக்ஸை கொடுத்து வாழ்த்தி வந்தேன்.

இன்று அவரது ஆத்மா சாந்தியடைய இறைவனை வேண்டுகிறேன்.

‘நடிகர்’ சிவகுமார்