‘புஷ்பா’ படம் நாலு படத்துக்கு சமம் – அல்லு அர்ஜுன்.

அல்லு அர்ஜுன் நடிப்பில், சுகுமார் இயக்கத்தில், மைத்ரி மூவி மேக்கர்ஸ் மற்றும் முட்டம்செட்டி மீடியா இணைந்து ‘புஷ்பா : தி ரைஸ்’ பாகம் – 1  தயாரித்துள்ளனர். லைகா புரடக்சன்ஸ் இப்படத்தை இணைந்து வழங்குகிறது. இத்திரைப்படத்தின் பெரும் பகுதி தமிழகத்தில் படம் பிடிக்கப்பட்டுள்ளது. தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னடம் ஆகிய மொழிகளில் ஒரே நேரத்தில் படமாக்கப்பட்ட இந்த அகில இந்திய திரைப்படத்தை தமிழகம் முழுவதும் ஸ்ரீ லட்சுமி மூவிஸ் வெளியிடுகிறது.

டிசம்பர் 17- ஆம் தேதி வெளியாகவுள்ள இப்படத்தின் முன் வெளியீட்டு பணிகள் தற்போது தீவிரமாக நடந்து வருகிறது. தமிழ்பதிப்பின் முன்வெளியீட்டுக்காக தமிழ் சினிமா பிரபலங்களுடன், நடிகர் அல்லு  அர்ஜீன், உட்பட படக்குழுவினர் சென்னையில் இன்று  பத்திரிக்கையாளர்களை சந்தித்தனர்.

இந்நிகழ்வில் ஸ்ரீ லட்சுமி மூவிஸ்  திருப்பதி பிரசாத் பேசியதாவது…

அல்லு அர்ஜூன், இசையமைப்பாளர் தேவி ஶ்ரீ பிரசாத், இயக்குநர் சுகுமார் அனைவருக்கும் வாழ்த்துகள். அல்லு அர்ஜூன் இங்கு சென்னையில் தி நகரில் தான் வளர்ந்தார். சின்னக்குழந்தையிலேயே ஒழுக்கத்தில் சிறந்தவராக இருந்தார். இந்தப்படம் காட்டுக்குள் அதிகம் படமாக்கப்பட்டிருக்கிறது. கண்டிப்பா வெற்றிப்படமாக இப்படம் இருக்கும். தமிழ் ரசிகர்களுக்கு இந்தப்படம் பிடிக்கும். எல்லோருக்கும் வாழ்த்துகள்.

நடிகர் அல்லு அர்ஜுன் பேசியதாவது…

மன்னிக்கனும் நான் தமிழ் பேசும்போது தமிழ்ல தப்பு இருக்கும் நிறைய வருஷம் ஆச்சு. தமிழ்ல பேசி, ஆனாலும் தமிழில் தான் பேச போறேன். முதலில் தயாரிப்பாளர்கள் அனைவருக்கும் நன்றி. இங்கு வந்து வாழ்த்திய  அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் நன்றி. மதன் கார்கிக்கு முதலில் மிகப்பெரிய நன்றி. தேவி இந்தப்படத்தை கேட்டு இந்தப்படம் தமிழ் மாதிரியே இருக்கே என்றார் நானே தமிழ் தானே என்றேன். சௌத்திரி சார் வட இந்தியாவில் என்னை பற்றி பேசினார்கள் என்றார், ஆனால் நம்ம ஊரில் நம்மை பேசவில்லையே என ஏக்கம் இருந்தது. அதை இப்படம் போக்கும். இது தமிழில் அப்படியே பொருந்தும். இப்படத்தை தமிழுக்கு ஏற்றவாறு மாற்றி தந்ததில் மிக முக்கிய பங்காற்றிய மதன் கார்க்கி சாருக்கு நன்றி. சுகுமார் சாருக்கு நன்றி.

நான் ஹீரோவா மாறினது ஆர்யா படத்தில் தான். அப்போதிருந்தே அவரிடம் கேட்டேன், நாம் எப்போது படம் செய்யலாம் என்று, ஆனால் நாம் சேர்ந்தால் நல்ல படமாக இருக்கனும் என்று சொல்லிக்கொண்டே இருந்தார். இந்தப்படம் அந்தளவு ஈஸி இல்லை. புஷ்பா படம் செய்வது, நாலு படத்தை செய்வது போன்றது. ஆனால் சுகுமார் மிக கடுமையாக உழைத்திருக்கிறார். மொத்த குழுவுமே காட்டுக்குள் மிகக்கடினமாக உழைத்திருக்கிறார்கள். தமிழில் ஜெயிக்க வேண்டும் என்பது எனது கனவு. இங்கு பாட்டு ஹிட் ஆனவுடன் அவ்வளவு சந்தோஷப்பட்டேன். தமிழில் ஜெயித்தால் தான்  வாழ்வு முழுமையாகும், இங்கிருந்து என்னை பாராட்டினால் நான் ரொம்ப சந்தோஷப்படுவேன். புஷ்பா அதை செய்யும். ஐகான் ஸ்டார் சுகுமார் சார் தான் தந்தார். ஸ்டைலீஷ் ஸ்டார் அவர் தான் தந்தார் நான் வேலை செய்யும் போது யோசிக்கமாட்டேன் அது ரசிகர்களுக்கு பிடிக்க வேண்டும் என்று மட்டுமே நினைப்பேன் அவ்வளவு தான். தமிழில் படம் செய்ய வேண்டும், தமிழ் இயக்குநர்களிடம் கேளுங்கள் நான் நடிக்க ரெடி. இந்தப்படம் சந்தன மரக்கடத்தலின் பின்னணியில் நடக்கும் புஷ்பாவின் கதை, அவ்வளவு தான். இதில் அரசியல் எல்லாம் இல்லை. படம் நல்லா வரணும் என்று நினைத்து  தான் நான் டப்பிங் பேசவில்லை. இந்தப்பட கேரக்டருக்கு மாறியது சவாலாக இருந்தது. லுக் செட் பண்ணவே எங்களுக்கு 4 மாதம் ஆனது. படம் வெளியான பிறகு இன்னும் நிறைய பேசலாம். இந்தப்படத்தில் அத்தனை விசயம் இருக்கிறது. ஷீட்டிங் ஸ்பாட் போகவே 2 மணி நேரம் ஆகும், அங்கு லைட் இருக்காது காட்டுக்குள் நிறைய கஷ்டங்கள் இருக்கும். எல்லாவற்றையும் கடந்து தான் படமாக்கியுள்ளோம். ராஷ்மிகா வித்தியாசமா பண்ணிருக்காங்க, பெரிய பெரிய நட்சத்திரங்கள் வித்தியாசமான லுக்கில் அட்டகாசமா பண்ணிருக்காங்க. முக்கியமா பகத் பாசில் அவர் நடிப்பதை பார்த்து ரசித்தேன். தமிழில் படம் ஓடினா என் வாழ்க்கை கம்ப்ளீட் ஆகும், நீங்கள் அனைவரும் கொண்டாடும் படமாக இது இருக்கும் நன்றி. என்றார்.

அல்லு அர்ஜுனின்  நடிப்பில் முதல் அகில இந்திய திரைப்படமான ‘புஷ்பா: தி ரைஸ்’ டிசம்பர் 17-ஆம் தேதி வெளியாக இருக்கிறது.