கோ பூஜை – கஜ பூஜை செய்த இசைஞானி இளையராஜா!

இசைஞானி இளையராஜாவின் 80-வது பிறந்தநாளை முன்னிட்டு திருக்கடையூர் கோவிலில்  சதாபிஷேக விழா நடந்தது . இந்நிகழ்ச்சியில் திரைப்பட இயக்குனர் பாரதிராஜா,கங்கைஅமரன் இளையராஜாவின்  மூத்தமகன்  கார்த்திக்ராஜா மகள் பவதாரிணி மற்றும் கங்கைஅமரன் குடும்பத்தினர் கலந்து கொண்டனர்.

மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுக்கா திருக்கடையூரில் தேவாரப்பாடல் பெற்ற அபிராமி சமேத அமிர்த கடேஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில் 60, 70, 75, 80, 90, 100 வயதை பூர்த்தி அடைந்தவர்கள் முறையே மணிவிழா, பீமரதசாந்தி, விஜயரத சாந்தி, சதாபிஷேகம், கனகாபிஷேகம், பூர்ணா அபிஷேகம் மற்றும் ஆயுள் ஹோமங்களை செய்து சுவாமி, அம்பாளை தரிசித்தால் நீண்ட ஆயுள் கிடைக்கும் என்பது ஐதீகம்.

இத்தகைய சிறப்புமிக்க கோவிலுக்கு 80 வயதை அடைந்த பிரபல திரைப்பட இசையமைப்பாளர் இசைஞானி இளையராஜா வந்தார். அவருக்கு கோவில் நிர்வாகம் சார்பில் மங்கள வாத்தியம் முழங்க வரவேற்பு அளிக்கப்பட்டது. தொடர்ந்து சிவாச்சாரியார்கள் அவரை கோவிலுக்குள் அழைத்துச் சென்றனர்.

கோவில் கொடிமரத்தின் அருகே இளையராஜா, கோ பூஜை மற்றும் கஜ பூஜை செய்தார். தொடர்ந்து நூற்றுக்கால் மண்டபத்தில் 84 கலசங்கள் மற்றும் யாக குண்டங்கள் அமைக்கப்பட்டு, இளையராஜாவுக்கு சதாபிஷேக முதல் கால யாக பூஜைகள் ,ஆயுஷ் ஹோமம் நவகிரக ஹோமம் மிருத்யுஞ்சய ஹோமம் உள்ளிட்டவைகள் நடத்தப்பட்டன.

இந்த நிகழ்வைத் தொடர்ந்து இன்று காலை 6 மணி முதல் 8 மணிக்குள் இரண்டாம் கால பூஜைகள் நடந்தது.. இந்நிகழ்ச்சியில் இளையராஜாவின் மகன் கார்த்திக் ராஜா, மகள் பவதாரணி, சகோதரர் கங்கை அமரன், பிரபல திரைப்பட இயக்குனர் பாரதிராஜா, நடிகர் பிரேம்ஜி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.