இன்டர்நேஷனல் படம்னு நினைச்சேன்!” – கார்த்தியின் ‘சர்தார் 2’ டிரைலரைப் பார்த்து மிரண்ட சூர்யா!

சென்னையில் பிரம்மாண்டமாக நடந்த ‘சர்தார் 2’ விழாஇயக்குநர் பி. எஸ். மித்ரன் இயக்கத்தில், நடிகர் கார்த்தி நடிப்பில் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் தயாராகி உள்ள ‘சர்தார் 2’ திரைப்படத்தின் இசை மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா சென்னையில் திரையுலக பிரபலங்கள் சூழ சிறப்பாக நடைபெற்றது. இத்திருவிழாவில் முன்னணி நடிகர் சூர்யா சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு, ‘சர்தார் 2’ படத்தின் அதிரடியான அதிரடி ஆக்ஷன் டிரைலரை வெளியிட்டார்.

சென்னை வர்த்தக மையத்தில் நடைபெற்ற இந்த விழாவில் தயாரிப்பாளர் டி. ஜி. தியாகராஜன், மூத்த நடிகர் சிவக்குமார், நடிகர்கள் சின்னி ஜெயந்த், எஸ்.ஜே.சூர்யா, நாசர், கவின் மற்றும் கதாநாயகிகள் மாளவிகா மோகனன், ஆஷிகா ரங்கநாத் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் கலந்துகொண்டனர். பிரின்ஸ் பிக்சர்ஸ் லக்ஷ்மன் குமார் தயாரிப்பில், உளவுத்துறை பின்னணியில் உருவாகியுள்ள இத்திரைப்படம் வரும் செப்டம்பர் 10 ஆம் தேதி உலகம் முழுவதும் தியேட்டர்களில் வெளியாகிறது.

விழாவில் பேசிய நடிகர் சூர்யா,

“‘சர்தார் 2’ படத்தின் டீசரைப் பார்த்தபோது நெட்பிளிக்ஸில் ஏதோ ஒரு இன்டர்நேஷனல் படம் ஓடுகிறது என்றுதான் நினைத்தேன். திடீரென்று கார்த்தி உள்ளே வந்ததும், ‘நம்ம படமா இது!’ என்று ஆச்சரியப்பட்டேன். தமிழில் இப்படி எல்லாம் கூட படம் பண்ண முடியுமா என்று வியந்தேன். டீசர் கொடுத்த அதே பிரம்மாண்ட ஆச்சரியத்தை இந்த டிரெய்லரும் தந்துள்ளது” என்றார்.மேலும், “இயக்குநர் மித்ரனுக்குள் ஒரு இன்டர்நேஷனல் ஜர்னலிஸ்ட் இருக்கிறார். சர்தார் முதல் பாகம் போலவே இதிலும் சமூக விவாதத்தை ஏற்படுத்துவார். கார்த்தியின் சினிமா பயணத்தில் ‘சர்தார்’ மிக முக்கியமானது. பட்ஜெட் பார்க்காமல் இவ்வளவு பெரிய முதலீட்டில் துணிச்சலுடன் தரமான ஒரு படத்தை தயாரிப்பாளர் லக்ஷ்மனும் தந்துள்ளார்” என்று வாழ்த்தினார்.

தொடர்ந்து பேசிய நடிகர் கார்த்தி,

“தமிழ் சினிமா என்பது வெறும் பொழுதுபோக்கிற்காக மட்டுமல்ல, அது தமிழ்நாட்டின் அடையாளம். இங்கு பலர் 40 அல்லது 50 மதிப்பெண் எடுத்தால் போதும் என்று நினைக்கும் போது, 100 மதிப்பெண் எடுக்க வேண்டும் என்று உழைத்திருக்கிறது இந்த ‘சர்தார் 2’ படக்குழு. எங்கள் கனவைத் திரையில் கொண்டு வந்த தயாரிப்பாளர்கள் லக்ஷ்மன் குமார் மற்றும் வெங்கடேஷ் ஆகியோருக்கு நன்றி” என்றார்.நாயகி மாளவிகா மோகனன் குறித்துப் பேசுகையில், “அவர் நம்ம ஊர் மோனிகா பெலூச்சி போல காட்சியளித்தார். அவருடன் ரொமான்ஸ் காட்சிகள் இருக்கும் என நினைத்தேன், ஆனால் இயக்குநர் அவர் எனக்கு பாஸ் (Boss) கேரக்டர் என்று கூறிவிட்டார்” என ஜாலியாகக் குறிப்பிட்டார். மேலும் ஆஷிகா ரங்கநாத் ஒரு சிறந்த ஸ்டார் மெட்டீரியல் என்றும், யோகி பாபுவின் கடுமையான உழைப்பு வியக்க வைத்தது என்றும் கூறினார்.

படத்தின் முக்கியக் கருப்பொருள் குறித்துப் பேசிய கார்த்தி, “பிளாஸ்டிக் பாட்டிலில் தண்ணீர் குடிப்பதை நீங்கள் இதுவரை தவிர்க்காமல் இருந்திருக்கலாம். ஆனால், ‘சர்தார் 2’ படத்தைப் பார்த்த பிறகு இதில் சொல்லப்பட்டிருக்கும் விஷயத்தை உங்களால் தவிர்க்கவே முடியாது. ஏன்னென்றால், உங்களது ஆரோக்கியத்தைப் பற்றிய அசைத்துப் பார்க்கும் ஒரு முக்கிய உண்மையை இப்படத்தில் சொல்லியிருக்கிறோம்” என்றார்.

மேலும் வில்லனாக நடித்துள்ள எஸ்.ஜே.சூர்யா குறித்துப் பேசுகையில்,

“திருநெல்வேலியில் இருந்து தமிழ் சினிமாவிற்கு ஒரு ஃபிரெஷ்ஷான வில்லன் கிடைத்திருக்கிறார். அவர் கேமரா முன்னால் 100 சதவீத உழைப்பைத் தந்தால், டப்பிங் மைக் முன்னால் அதனை 500 சதவீதமாக மாற்றி விடுகிறார். எஸ்.ஜே.சூர்யாவின் எனர்ஜியை யாராலும் நகலெடுக்க முடியாது” எனப் பாராட்டினார்.

தனது தந்தை சிவக்குமார் குறித்துப் பேசுகையில்,

“என் அப்பா எனக்காக இதுவரை ஒரு கதை கூடக் கேட்டதில்லை. நானே முட்டி மோதி வளரட்டும் என்று விட்டுவிட்டார். அவர் எனக்குக் கொடுத்த இந்தச் சுதந்திரம்தான் என்னை இந்த அளவிற்கு உயர்த்தியுள்ளது” என்றார்.இறுதியாக, “கடந்த மூன்று வருடங்களாக எனது படங்களுக்காக ரசிகர்களை ரொம்பக் காக்க வைத்துவிட்டேன். ஆனால், இந்த முறை ‘சர்தார் 2’ படத்தில் ரசிகர்களுக்கு நான் எந்தக் குறையும் வைக்கவில்லை; முழுவதும் இறங்கி அடித்திருக்கிறேன். ரசிகர்கள் தியேட்டருக்கு வந்து சந்தோஷமாக என்ஜாய் செய்யும் படமாக இது இருக்கும்” என்று கூறி தனது உரையை நிறைவு செய்தார்.