துடிப்பான, நேர்மையான போலீஸ் இன்ஸ்பெக்டர் சிபி சத்யராஜ். குற்றவாளிக்கு சட்டத்தால் தண்டனை கிடைக்காத பட்சத்தில், அவரே தண்டணையை கொடுக்கக்கூடியவர். ஒரு நாள் கள்ளக்குறிச்சி அருகே இளம்பெண் ஒருவர் காணாமல் போகிறார். அவரது பெற்றோர்கள், இவரது காவல் நிலையத்தில் புகார் அளிக்கிறார்கள். விசாரணையை தொடங்கும் போலீஸ் இன்ஸ்பெக்டர் சிபி சத்யராஜ், அந்த பெண் கடத்தப்பட்டிருப்பதற்கு பின்னணியில், பெரிதான ஒரு குற்றச்செயல் நடைபெற்றதாக கருதுகிறார்.
இந்நிலையில், சென்னையில் இருந்து கோவைக்குச் செல்லும் ஒரு பேருந்தில், ஒரு இளம் பெண் கடத்தப்பட்டு, சித்தரவதை செய்யப்படுவதாக இளைஞர் ஒருவர், போலீஸ் அவசர எண் மூலம் தகவல் கொடுக்கிறார். போலீஸ், அந்த பேருந்தை நடு வழியில் நிறுத்தி சோதனை செய்கின்றனர். அங்கே, போலீஸுக்கு தகவல் கொடுத்த இளைஞர் கொலை செய்யப்பட்டு கிடக்கிறார். போலீஸார் குழப்பமடைகின்றனர். இந்த இரண்டு குற்றச்செயல்களையும், அதன் பின்னணியினையும், போலீஸ் இன்ஸ்பெக்டர் சிபி சத்யராஜ், எப்படி கண்டுபிடிக்கிறார், என்பதை விறுவிறுப்பாகவும், சுவாரஸ்யமாகவும் சொல்வதே ‘டென் ஹவர்ஸ்’ படத்தின் கதை, திரைக்கதை மற்றும் க்ளைமாக்ஸ்!
‘காஸ்ட்ரோ’ என்ற துடிப்பான, நேர்மையான போலீஸ் இன்ஸ்பெக்டர் கதாபாத்திரத்தில், சிபி சத்யராஜ் கதாபாத்திரத்திற்கேற்றபடி சிறப்பாக நடித்திருக்கிறார். ஒரு சில ஆக்ஷன் காட்சிகளைத்தவிர, குற்றப்பின்னணியை ஆராயும் கதை என்பதால், தனது அளவான நடிப்பின் மூலம் திரைக்கதைக்கு வேகம் கூட்டுகிறார். அவரோடு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டராக நடித்திருக்கும் கஜராஜூம் இணைந்து கொள்கிறார்.
அரசு மருத்துவராக நடித்திருக்கும் ஜீவா ரவி, கொலை செய்யப்படும் இளைஞராக நடித்திருக்கும் ராஜ் ஐயப்பன், முருகதாஸ், திலீபன் என அனைவரும் கொடுத்த வேலையை சிறப்பாக செய்திருக்கிறார்கள்.
ஒரு இரவில் நடக்கும் இத்திரைப்படத்தின் இரவு நேரக் காட்சிகளை, ஒளிப்பதிவாளர் ஜெய் கார்த்திக், சிறப்பாக படமாக்கியிருக்கிறார்.
இசையமைப்பாளர் கே.எஸ்.சுந்தரமூர்த்தியின் பின்னணி இசை, சற்று சப்தமாக இருந்தாலும் காட்சிகளுக்கு வலு சேர்த்திருக்கிறது.
எடிட்டர் லாரன்ஸ் கிஷோர், காட்சிகளை தொய்வில்லாமல் எடிட் செய்திருக்கிறார்.
குற்றச்செயல்களை செய்தவர்கள் யார், என்பது க்ளைமாக்ஸ் வரை தெரியாமல் திரைக்கதையை அமைத்த, இயக்குநர் இளையராஜா கலியப்பெருமாள் பாராட்டுக்குரியவர்.
மொத்தத்தில், ‘டென் ஹவர்ஸ்’ ஒரு நல்ல கிரைம், சஸ்பென்ஸ் திரில்லர்!