‘பெருச்சாழி’ இயக்குனரின் அடுத்த படம் ரெடி!

பிரசன்னா, சினேகா நடித்த ‘அச்சமுண்டு அச்சமுண்டு’ படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர், அருண் வைத்தியநாதன். இதையடுத்து, அர்ஜூன் நடிப்பில் ‘நிபுணன்’ படத்தையும், மோகன்லால் நடித்த ‘பெருச்சாழி’ படத்தினையும் இயக்கினார்.

விஜய்சேதுபதி நடித்த ‘சீதக்காதி’ படத்தின் இணை தயாரிப்பாளரான இவர், தற்போது குழந்தைகளுக்கான ஒரு படத்தை தனது சொந்த நிறுவனமான யூனிவெர்ஸ் கிரியேஷன்ஸ் மூலம் தயாரித்து இயக்கவுள்ளார்.

இது குறித்து இயக்குனர் அருண் வைத்தியநாதன் கூறுகையில்..,

“குழந்தைகளை மையமாக வைத்து உருவாகும் தமிழ் படங்கள் மிகவும் குறைவு. அப்படி எடுக்கப்படும் படங்களிலும் காதல், சண்டை காட்சிகள் போன்றவை இடம் பெறும். அவ்வாறாக இல்லாமல், குழந்தைகளின்  உலகத்தை, குழந்தைகளுக்காக, குழந்தைகளை வைத்தே காட்ட வேண்டும் என்கிற முயற்சி தான் இந்த படம்.

இந்தப் படத்தை பல்வேறு சர்வதேச திரைப்பட விழாக்களிலும் திரையிட உள்ளோம். நான்கு குழந்தைகள்  முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்க உள்ளனர்.

இப்படத்தின் கதை சென்னையில் நடைபெற்றாலும், உலகத்தில் உள்ள எந்த குழந்தையும் தன்னை இந்தப்படத்தின் கதாபாத்திரத்துடன்  தொடர்பு படுத்திக் கொள்ள முடியும்.  என்று அருண் வைத்தியநாதன் கூறுகிறார்.