‘தகைசால் தமிழர்’ விருதுக்கு பெருமை சேர்த்த என்.சங்கரய்யா!

தமிழ்நாட்டிற்கும், தமிழினத்தின் வளர்ச்சிக்கும் பாடுபட்டவர்களை கௌரவிப்பதற்காக, “தகைசால் தமிழர்” என்ற பெயரில் புதிய விருதினை உருவாக்கி உத்தரவிட்டுள்ளார், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின்.

ஒவ்வொரு வருடமும் ”தகைசால் தமிழர்” விருது பெறுபவர்களுக்கு பத்து லட்சமும், பாராட்டுச் சான்றிதழும், சுதந்திர தின விழாவின்போது, முதல்வர் கையால் வழங்கப்படும்.

“தகைசால் தமிழர்”  பெறுபவர்களை தேர்ந்தெடுக்க  தமிழக முதல்வர் தலைமையில், தொழில் துறை, தமிழ் ஆட்சி மொழி மற்றும் தமிழ்ப் பண்பாட்டுத்துறை அமைச்சர் மற்றும் தலைமைச் செயலாளரை உள்ளடக்கிய ஒரு குழு அமைக்கப்பட்டுள்ளது.

2021 வருடத்திற்கான முதல்  ‘தகைசால் தமிழர்’ விருது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் சங்கரய்யாவுக்கு வழங்கப்படும் என தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

இதுகுறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் தோழர். என். சங்கரய்யா விடுத்துள்ள பத்திரிகைச் செய்தியில் கூறியிருப்பதாவது..

‘தமிழக அரசு புதிதாக அறிவித்துள்ள ‘தகைசால் தமிழர்’ விருதினை இந்தாண்டுக்கு எனக்கு வழங்குவதாக மாண்புமிகு. தமிழக முதலமைச்சர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்கள் அறிவித்துள்ளார்கள்.

எனது சேவையை பாராட்டும் வகையில் அறிவிக்கப்பட்டுள்ள இவ்விருதினை ஏற்றுக் கொள்வதோடு, எனக்கு இந்த விருதினை அளித்திருக்கிற மாண்புமிகு. தமிழக முதலமைச்சர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்களுக்கு நன்றியினைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்த விருதிற்காக அளிக்கப்படும் ரூ. 10 லட்சம் தொகையினை கோவிட் 19 பாதிக்கப்பட்ட மக்களுக்காக தமிழக அரசு திரட்டி வரும் முதலமைச்சரின் கோவிட் 19 பேரிடர் நிவாரண நிதிக்கு மகிழ்ச்சியோடு வழங்குகிறேன் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

மாணவனாக இருந்த காலந்தொட்டு இன்று வரை தமிழ்நாட்டு மக்களின் நலனுக்கும், இந்தியநாட்டில் விடுதலைக்கும், உழைப்பாளி மக்கள் நலன் காத்திடவும் என்னால் முடிந்தளவு பணியாற்றியுள்ளேன், சுரண்டலற்ற பொதுவுடமை சமுதாயத்தை உருவாக்க நான் ஏற்றுக் கொண்ட மார்க்சிய கொள்கையின் அடிப்படையில் பயணம் செய்துள்ளேன். எனது இறுதி மூச்சு வரை இப்பணியை தொடர்ந்து நிறைவேற்றுவேன் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

என, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் சங்கரய்யா தெரிவித்துள்ளார்.