‘இக்‌ஷு’ டீசரை வெளியிட்ட போலீஸ் அதிகாரி ராஜேஸ்வரி!

அறிமுக நாயகன் ராம் நடிக்கும் படம் இக்ஷு. டாக்டர் அஸ்வினி நாயுடு தயாரிக்கும் இந்தப் படத்தை வி.வி.ருஷிகா இயக்கியுள்ளார். விகாஸ் படிஷா இசையமைத்துள்ளார். நவீன் டுகிட்டி ஒளிப்பதிவு செய்துள்ளார். தமிழ், தெலுங்கு உட்பட ஐந்து மொழிகளில் தயாராகும் இந்தப் படத்தின் டீசர் வெளியீட்டு விழா சென்னையில் விமர்சையாக நடைப்பெற்றது. சமீபத்திய மழையின்போது உயிருக்கு போராடிக்கொண்டிருந்த இளைஞரை துணிச்சலாக காப்பாற்றிய காவல் ஆய்வாளர் திருமதி ராஜேஸ்வரி அவர்கள் தமிழ் சினிமாவின் முன்னோடிகள் முன்னிலையில் டீசரை வெளியிட்டார்.

விழாவில் தயாரிப்பாளர் கே.ராஜன், இயக்குநர் கலைப்புலி ஜி.சேகரன், தயாரிப்பாளர் சங்கத்தின் செயற்குழு உறப்பினர் விஜயமுரளி, கில்டு தலைவர் ஜாக்குவர் தங்கம், நடிகர் நட்டி உட்பட ஏராளமான திரையுலக பிரபலங்கள் கலந்துகொண்டனர். நிகழ்ச்சிக்கு வந்தவர்களை மக்கள் தொடர்பாளர் பிரியா வரவேற்றார். நிகழ்ச்சியை கவிதா தொகுத்து வழங்கினார்.

விழாவில் இசையமைப்பாளர் நவீன் படிஷா பேசும்போது, ‘இந்தப் படத்தின் நாயகன் ராம் நேரில் பார்க்கும்போது சாக்லேட் பாய் லுக்கில் இருக்கிறார். ஆனால் படத்தில் அவருடைய நடிப்பு டெரர் ரகமாக உள்ளது. படம் முழுவதும் அவருடைய கடும் உழைப்பை பார்க்க முடிந்தது. இதில் பாடல்கள் அனைத்தும் சிறப்பாக வந்துள்ளது. பாடலாசிரியர்கள் ஸ்ரீ சிராக், ஷியாம் ஆகியோர் சிச்சுவேஷனுக்கு ஏற்ற மாதிரி பிரமாதமான வரிகளைக் கொடுத்துள்ளார்கள். பாடல்கள் பேசப்படும் விதத்தில் வந்துள்ளன’ என்றார்.

 

விழாவில் நாயகன் ராம் கூறியதாவது, இந்த டீமுக்கு நான் மிகப் பெரிய நன்றி சொல்லவேண்டும். ஏனெனில், புதுமுகமாகிய என் மீது நம்பிக்கை வைத்து மிகப் பெரிய பொறுப்பை வழங்கியுள்ளார்கள். அந்த நம்பிக்கையை காப்பாற்றும் விதமாக கதைக்கும் கேரக்டருக்கும் என்ன நியாயம் செய்ய முடியுமோ அதை செய்திருக்கிறேன். இந்தப் படம் அனைத்து தரப்புக்கும் பிடிக்கும் விதமாக உருவாகியுள்ளது’’ என்றார்.

இயக்குநர் ருஷிகா பேசும்போது, ‘இது எனக்கு முதல் படம். இந்தப் படத்தை  உண்மை சம்பவத்தை மையாக வைத்து இயக்கியுள்ளேன். இது பேமிலி கலந்த த்ரில்லர் ஜானர். எனது தாய்மொழி தெலுங்காக இருந்தாலும் தமிழ் மொழியில் படம் இயக்க வேண்டும் என்பது கனவாக இருந்தது. அந்த வகையில் ஒரே கல்லில் ஐந்து மாங்காய் அடித்த மாதிரி தமிழ், தெலுங்கு என்று ஐந்து மொழிகளில் இயக்கியது மகிழ்ச்சி’ என்றார்.

விழாவில் தயாரிப்பாளர் விஜய் முரளி கூறியதாவது, ஒரு பானை சோறுக்கு ஒரு சோறு பதம் என்பதுபோல் ஐந்து மொழிகளில் வெளியான டீசர் படத்தின் தரத்தின் உறுதி செய்துள்ளது. பெண் இயக்குநர்கள் வரிசையில் ருஷிகா அறிமுகமாவது மகிழ்ச்சி. ‘இக்ஷு’ என்ற சமஸ்கிருத வார்த்தைக்கு ‘கண்’ என்றும் ‘சிவன்’ என்றும் அர்த்தப்படுத்தலாம் என்றார்கள். அந்த வகையில் டைட்டில் தனித்துவமாக உள்ளது.

சினிமாவுக்கு ஜாதி, மதம் என்கிற பேதம் கிடையாது. எந்த மொழியில் எடுத்தாலும் அது சினிமாதான். இந்த நிகழ்ச்சிக்கு காவல் ஆய்வாளர் ராஜேஸ்வரி சிறப்பு விருந்தினராக வந்துள்ளார். சமூகத்துக்கு காவல் துறையின் பங்களிப்பு மிக முக்கியம். உதராணத்துக்கு ஒரு நாள் நேரம் காவல் துறை இயங்கவில்லை என்றால் நாட்டில் வன்முறை, கொலை, கொள்ளை என்று சமூக விரோத குற்றங்கள் பெருகிவிடும். அத்தகைய சூழலில் காவல் துறையினர் எப்போதும் முன் களப் பணியாளர்களாக தங்கள் கடமையை சரியாக செய்து வருகிறார்கள். அவர்களுக்கு வீர வணக்கம். இது சஸ்பென்ஸ் த்ரில்லர் படம் என்பதால் ரசிகர்களிடைய வரவேற்பு பெறும் என்ற நம்பிக்கை இருக்கிறது’ என்றார்.

விழாவில் நட்டி பேசும்போது, ஹீரோ ராம் முதல் படம் மாதிரி இல்லாமல் வெகு சிறப்பாக பண்ணியிருக்கிறார். இயக்குநர் ருஷிகாவும் திறமையாக இயக்கியுள்ளார். காவல் ஆய்வாளர் ராஜேஸ்வரி அவர்கள் மழை சமயத்தில் ஒரு உயிரை காப்பாற்றியது எல்லோர் மனதையும் நெகிழ வைத்தது. அதற்கு தலை வணங்குகிறேன். காவல் துறை உங்கள் நண்பன் என்பதற்கு ராஜேஸ்வரி மேடம் சிறந்த உதாரணம். இந்தப் படம் வெற்றியடைய வாழ்த்துகள்’’ என்றார்.

காவல் ஆய்வாளர் ராஜேஸ்வரி பேசியதாவது,

காவல் அதிகாரியான என்னை இந்த விழாவுக்கு அழைத்ததில் மகிழ்ச்சி. காவல் துறையில் நான் மட்டும் வெளிச்சத்துக்கு வந்திருக்கிறேன். என்னைப்போன்று பல காவலர்கள், அதிகாரிகள் முன் களப் பணியாற்றி மக்கள் சேவை செய்து வருகிறார்கள். அவர்களும் புகழுக்கும் போற்றுதலுக்குரியவர்கள் என்பதை இங்கு பதிவு செய்வதில் மகிழ்ச்சி அடைகிறேன். காவல் துறை எப்போதும் உங்கள் நண்பன் என்பதுதில் மாற்றமே இல்லை.

சினிமா சமூகத்தில் பல மாற்றங்களுக்கு வழிவகுத்துள்ளது. பல படங்களில் காவல் துறையை கண்ணியமாக காண்பித்துள்ளார்கள். சில படங்களில் காவல் துறையை தவறாகவும் சித்தரித்துள்ளனர். இங்கு பேசும்போது காவல் துறைக்கு ஒரு நாள் விடுமுறை அளித்தால் நாடு என்ன மாதிரி பிரச்சனையை சந்திக்கும் என்பதை சொன்னார்கள். அதையே நான் மீண்டும் ஞாபகப்படுத்துகிறேன். காவல் துறையின் சேவை இல்லையென்றால் மக்களின் நிம்மதி பறிபோய்விடும். குற்றங்கள் பெருகிவிடும். காக்கி என்றால் விரோதமாக பார்க்கும் மனநிலையை கைவிடவேண்டும். காக்கி உடைக்குள்ளும் ஈரம் இருக்கிறது.

நாங்கள் வெளியேதான் பலா மாதிரி தெரிவோம். உள்ளே இனிக்கும் சுளை. மக்கள் சேவைதான் எங்களுக்கு முக்கியம். எங்களை நேசியுங்கள். காவல் துறையினர் பொதுப் பணியில் இருப்பதால் நல்லது, கெட்டது என்று தங்கள் வீட்டு நிகழ்ச்சிகள் எதிலும் கலந்துகொள்ளாமல் மக்கள் சேவையில் இருப்பார்கள். காவல் துறை என்பது உங்கள் சேவைக்காக மட்டுமே. பயப்படாமல் நீங்கள் எங்களை அணுகுங்கள். இதற்கு யாருடைய துணையும் வேண்டாம். உங்கள் பிரச்சனை எதுவோ நேரிடையாக வாருங்கள். நாங்கள் தீர்வுக்கு வழி வகுக்கிறோம். காவல் துறை புனிதமான துறை. உங்கள் குழந்தைகளுக்கு தைரியம் கொடுத்து வளர்த்தெடுங்கள்’ என்றார்.

விழாவுக்கு வந்த அனைவருக்கும் தயாரிப்பாளர் அஸ்வினி நாயுடு நன்றி தெரிவித்தார்.