‘ஒரு கிடாயின் கருணை மனு’ எனும் படத்தினை இயக்கியிருந்த இயக்குநர் சுரேஷ் சங்கையா இயக்கத்தில் வெளியாகியிருக்கும் படம்,’சத்திய சோதனை’. சூப்பர் டாக்கீஸ் எனும் பட நிறுவனம் சார்பில், சமீர் பரத் ராம் தயாரித்திருக்கிறார்.
பிரேம்ஜி அமரன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்க அவருடன், ஸ்வயம் சித்தா, ரேஷ்மா பசுபுலேட்டி, ஞானசம்பந்தம், செல்வ முருகன், கே. ஜி. மோகன் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.
ஆர். வி. சரண் ஒளிப்பதிவு செய்திருக்க, எம். ரகுராம் இசையமைத்திருக்கிறார்.
உண்மை சம்பவங்களை தழுவி உருவாக்கப்பட்டதாக சொல்லப்படும் ‘சத்ய சோதனை’ எப்படி இருக்கிறது?
ஓர்ந்துகண் ணோடாது இறைபுரிந்து யார்மாட்டும்
தேர்ந்துசெய் வஃதே முறை.
– என்ற குறளினை மைய்யப்படுத்தி கதை, திரைக்கதை அமைத்திருக்கும் இயக்குநர் சுரேஷ் சங்கையா, பாராட்டுக்குரியவர்.
வழக்குகளை விரைவில் முடிக்க காவல் துறையால், கொண்டுவரப்படும் நிரபராதிகளை கோர்ட் அணுகும் முறையும், அப்பாவிகளை குற்றவாளியாக ஆக்கும் காவல் துறையை பற்றியும் அலசி ஆராய்ந்து, காவல் துறையை கொத்துக்கறி போட்டுள்ளனர்.
கொலை செய்யப்பட்டு வெயிலில் கிடக்கும் ஒருவரின் உடலினை இழுத்து நிழலில் போட்டுவிட்டு, அவரது உடமைகளை எடுத்துக்கொண்டு போய் அருகில் இருக்கும் போலீஸ் ஸ்டேஷனில் கொடுக்கிறார், பிரேம்ஜி. இதற்கிடையே, கொலையாளிகள் போலீஸ் ஸ்டேஷனில் தானாக வந்து சரணடைகிறார்கள்.
போலீஸாரிடம், கொலை செய்யப்பட்டவரின் உறவினர்கள் அவரது உடமைகள் குறைவதாக கூறுகின்றனர். இதனால் போலீஸாருக்கு பிரேம்ஜி மேல் சந்தேகம் வருகிறது. இதன் பிறகு என்ன நடந்தது? என்பதே, ‘சத்திய சோதனை’ படத்தின் சிரிக்கவும், சிந்திக்கவும் வைக்கும் மொத்த கதையும்.
கொள்ளையடிப்பதை மட்டுமே குறிக்கோளாக கொண்ட, திறமையற்ற போலீஸாரால் நீதி மன்றத்தின் நேரமும், அப்பாவிகளும் எப்படி சிக்கி சீரழிகிறார்கள் என்பதை, சிறிய பட்ஜெட்டில், எளிமையான திரைக்கதை மூலம் ரசிகர்களுக்கு சொல்ல வேண்டிய கருத்தினை சொல்லி விடுகிறார், இயக்குநர் சுரேஷ் சங்கையா.
பிரேம்ஜி, அப்பாவித்தனமான இளைஞர் கதாபாத்திரத்திற்கு, பொருத்தமாக இருக்கிறார். கொலை செய்யப்பட்டவரின் உடலை, சர்வ சாதரணமாக இழுத்து போட்டு, அதன் மேல் பனை ஓலைகளை அடுக்கும், அந்த முதல் காட்சியிலேயே ரசிகர்களுக்கு நெருக்கமாகி விடுகிறார். வழக்கமான வாலுத்தனங்களை ஓரம் கட்டிவிட்டு, கதாபாத்திரமாகவே மாறியிருப்பது சிறப்பு.
பெயரளவில் நாயகியாக நடித்திருக்கும் ஸ்வயம் சித்தாவுக்கு ஒரு சில காட்சிகள் மட்டுமே. குறிப்பிட்டு சொல்ல ஒன்றுமில்லை.
பிரேம்ஜிக்கு அடுத்தபடியாக, காவலர்களாக நடித்திருக்கும் சித்தன் மோகன், செல்வ முருகன் இருவரும் பிரதான கதாபாத்திரங்களாக வந்து, தியேட்டரை குலுங்க குலுங்க சிரிக்க வைக்கிறார்கள். இவர்களின் பொறுப்பற்ற, முட்டாள் தனமும், கொள்ளையடிக்கும் புத்தியும் போலீஸாரின் மறுபக்கம். இவர்கள் பேசும் வட்டார பாஷை, வெடிச்சிரிப்பினை ஏற்படுத்துகிறது.
வில்லங்கத்தின் மொத்த உருவமாக நடித்திருக்கும் பாட்டி, கிரேட்!
நீதிபதியாக நடித்திருக்கும் கு.ஞானசம்பந்தம், சிறப்பாக நடித்திருக்கிறார். போலீஸாரை நக்கல் அடிக்கும் காட்சிக்கு, தியேட்டரில் கை தட்டல்களை அள்ளுகிறது.
சின்ன பட்ஜெட்டில் சமூக அவலத்தை தோலுரித்து காட்டும், இயக்குநர் சுரேஷ் சங்கையாவின் சத்திய சோதனை சிரிக்கவும், சிந்திக்கவும் வைக்கிறது.