இருளர் சமுதாய மக்களின் வாழ்வுரிமைக்காக போராடும் சூர்யாவுக்கு ‘A’ சான்றிதழ்!

‘கூட்டத்தில் ஒருத்தன்’ படத்தை இயக்கிய டிஜே ஞானவேல் அடுத்ததாக இயக்கியுள்ள படம், ‘ஜெய் பீம்’. இதில் சூர்யா, ரஜிஷா விஜயன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். சூர்யாவின் ‘2D என்டர்டெயின்மெண்ட்’ நிறுவனம் இந்தப் படத்தைத் தயாரித்துள்ளது.

இந்தப் படம் இருளர் இன பழங்குடி மக்களை பற்றிய உண்மை சம்பவங்களைத் தழுவி எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

பழங்குடி இருளர் சமுதாய மக்களுக்கு இருக்கின்ற முதன்மையான பிரச்சனையே சாதி சான்றிதழ் பெறுவதுதான். மேலும் சாதி சான்றிதழ் இல்லாமல், பழங்குடியின மாணவர்கள் அவர்களது மேற்படிப்பைத் தொடர முடியாமல் பாதியிலேயே நிறுத்தி விடுகின்ற அவலும் தொடர்கிறது. அத்துடன் அவர்கள் எப்படி ஏமாற்றபடுகிறார்கள், அவர்களுக்கான சட்டப் பாதுகாப்புகள் என்ன என்பதை சினிமா பாணியில் சொல்வதே ‘ஜெய் பீம்’ படத்தின் கதை.

சூர்யா இந்தப் படத்தில் பழங்குடி இருளர் சமுதாய மக்களின் வாழ்வுரிமைக்காக போராடும் வழக்கறிஞராக நடித்துள்ளார்.

ஆண்ட பரம்பரை, அடிமை பரம்பரை என்பதை தவிர்த்து, மக்களுக்கான அடிப்படை உரிமையை பேசுவதால், இது கோலிவுட்டில் அதிக எதிர்பார்ப்பினை உருவாக்கியுள்ளது.

இருளர் சமுதாயம் உள்ளிட்ட பழங்குடியின மக்களின்  ஆழமான அரசியல் பேசும், 164.4 நிமிடங்கள் ஓடக்கூடிய ‘ஜெய் பீம்’ படத்திற்கு ‘ ஏ’  சான்றிதழ் கிடைத்துள்ளது.

வரும் நவம்பர் மாதம் 2-ம் தேதி அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளது.