மதுரை, மேலமடை சலூன் கடை மோகன் மகள் நேத்ராவை பாராட்டிய நடிகர் பார்த்திபன்!

மதுரை மேலமடை பகுதியில் சலூன் கடை நடத்தி வருபவர் மோகன். பொது முடக்கம் அமலில் உள்ள நிலையில், அருகில் உள்ள  நெல்லை தோப்பு கொரோனாவின்  பாதிப்பால் முழுவதுமே முடக்கப்பட்டது. பெரும்பாலும் தினக்கூலித் தொழிலாலர்களை அதிகம் கொண்ட  அந்த பகுதியில் வாழும் மக்களின் பெருந்துயர் கண்டு, சிறுசிறு உதவிகளை செய்து வந்தார்.

தனது மகளின் மேற்படிப்புக்காக பல வருடங்களாக சிறுக சிறுக  சேமித்து வைத்திருந்த ரூ.5 லட்சம் பணத்தை தவிர, வேறு எதுவும் இல்லாமல் தவித்த போது, அவரது மகள் நேத்ரா அந்த பணத்தை எடுத்து உதவிடுமாறு கூற, மொத்த பணத்தையும் எடுத்து அந்த பகுதியில் வசித்து வந்த சுமார் 600-க்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு ஒரு மாதத்திற்கு தேவையான அரிசி, மளிகை, மற்றும் காய்கறிகள் தொகுப்பை உரிய அனுமதி பெற்று வழங்கியிருக்கிறார்.

இதை கேள்விபட்ட நடிகர் பார்த்திபன் கூறியதாவது…

இந்த செய்தி என்னை பெரிதாக பாதித்த நிலையில், எனது நண்பர் சுந்தர் உதவியுடன் நேத்ராவிடமும், அவரின் தந்தை மோகனிடம் பேசி எனது மகிழ்ச்சியையும், பாராட்டுகளையும் மனநெகிழ்வோடு பகிர்ந்துக் கொண்டேன். மேலும், தாங்கள் பெரும் பணம் படைத்தவர்கள் இல்லையென்றாலும், உதவ வேண்டும் என்ற மனம் கொண்ட நேத்ராவுக்கு ஒரு இன்ப அதிர்ச்சி அளிக்கும் விதமாக இன்று அவர்களுக்கு புதிய ஆடைகள் பட்டு வேஷ்டி, பட்டு புடவை, அங்கவஸ்திரம், நேத்ராவுக்கு புது உடைகள், கிரீடம், இனிப்புகள், பழங்கள், என அனைத்தையும் அவர்களுக்கு நண்பர் சுந்தர் மூலம் கொடுத்தனுப்பி எனது பார்த்திபன் மனித நேய மன்றத்தின் சார்பாக மகிழ்ச்சியை பகிர்ந்துக் கொண்டேன்.

மேலும், நேத்ராவின் இந்த ஆண்டு பள்ளி படிப்புக்குரிய அனைத்து செலவுகளையும் நான் ஏற்றுக் கொண்டிருக்கிறேன். மேலும் வேறெந்த உதவி தேவைபட்டாலும்  செய்ய தயாராக இருக்கிறேன் . என்றார்